வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான் உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இசை பெரிதா மொழி பெரிதா என்பது குறித்து அவர் பேசியது சர்ச்சையாக வெடித்தது. அதற்கு கங்கை அமரன் பதிலடி கொடுத்ததும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது.
இதனிடையே பல்வேறு இலக்கியம், அரசியல் நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் வைரமுத்து அண்மையில் மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்று பேசினார். இது தொடர்பாக கடந்த 7 ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “கொரோனா காலத்தில் வீடுதேடி வந்து உணவுப்பொருள் தந்து உயிர்காத்த உத்தமர்கள் வணிகர்கள் என்றேன். அவர்கள் தந்த பொருளால் தயாரிக்கப்பட்ட ரசம் நமக்கெல்லாம் மருந்தானது என்றேன். சீரகம் மிளகு பூண்டு தக்காளி மிளகாய் புளி கடுகு என்பவை ரசத்தின் உள்ளீடுகள், சீரகத்தின் மெக்னீசியம் வயிற்றுச்சுவர்களை
வலிமை செய்வது மிளகின் ஹைட்ரோ குளோரிக் அமிலம் புரதத்தை உடைத்துச் செரிப்பது. பூண்டு கொழுப்பைச் சிதைத்துக் கரைப்பது. தக்காளி மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது; தோல்நலம் காப்பது. மிளகாய் வைட்டமின் ஏ, சி இரண்டும் உடையது. புளி வயிற்றுக் கோளாறு சரிசெய்து இருதயத்தின் வலிமை கூட்டுவது. கடுகு எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க உதவுவது. இப்படி 'ரச'வாதம் செய்து மருத்துவர்கள் ஆனவர்கள் வணிகர்கள்.
அவர்தம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; பாதுகாப்பு உரிமையாக்கப்பட வேண்டும்” எனப் பேசியதாக பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இது தொடர்பாக பதிவிட்ட வைரமுத்து, “வங்கக் கடல்போல் நிகழ்ந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் ஒரு பெருங்கோரிக்கை வைத்தேன். 'தமிழ்நாட்டின் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் விளங்கவேண்டும்' என்றேன். நான் பேசிமுடித்த மறுகணமே 'அப்படியே செய்து முடிப்போம்' என்று அறிவித்தார் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா. நான் மகிழ்ந்துபோனேன். எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த ஒரு குழு அமைப்போம்; அரசின் பெருந்துணையும் கோருவோம். இதுமட்டும் நிறைவேறிவிட்டால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும்; வாசிப்போர் நாவில் தமிழ் தவழ்ந்தோடும். தள்ளிப் போடுவதால் லட்சியங்கள் தள்ளாடிப்போகின்றன விரைந்து செயல்படுவோம். அருள்கூர்ந்து ஆதரவு தாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கக் கடல்போல் நிகழ்ந்த
வணிகர் சங்கங்களின்
பேரமைப்பு மாநாட்டில்
ஒரு பெருங்கோரிக்கை வைத்தேன்
'தமிழ்நாட்டின்
அனைத்து வணிக நிறுவனங்களின்
பெயர்ப் பலகைகளும்
தமிழில் விளங்கவேண்டும்' என்றேன்
நான் பேசிமுடித்த மறுகணமே
'அப்படியே செய்து முடிப்போம்'
என்று அறிவித்தார்
மாநிலத் தலைவர்…— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2024