Skip to main content

கமல் கேட்ட மூன்று வார்த்தை அரசியல் கேள்வி - அதே மூன்று வார்த்தையில் வைரமுத்து பதில்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
vairamuthu invited kamal for his book opening ceremony

கவிஞர் வைரமுத்து எழுத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் கவிதை நூல் ‘மகா கவிதை’. வைரமுத்துவின் 39வது  படைப்பாக உருவாகியுள்ள இந்த புத்தகத்தில் நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி இந்த நூல் வெளியாகவுள்ளது. அந்த நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களுக்கு  அழைப்பிதழ் வழங்கி வருகிறார். 

அந்த வகையில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கினார். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனிற்கு தற்போது வழங்கியுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து,  “மகா கவிதை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்க வருகைதரும் கலைஞானி கமல்ஹாசனைச் சந்தித்து அழைப்பிதழும் நூலும் வழங்கினேன். எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த நாற்காலியில் 42ஆண்டு நினைவுகள் அமர்ந்திருந்தன. கலை அரசியல் மதம் என்று தவளைக்கல்லாய்த் தாவித்தாவி எண்ணூர் எண்ணெய்ப் பிசுக்கில் இடறி நின்றது உரையாடல். 

குடிதண்ணீர் எண்ணெய் ஆவதும் எண்ணெய் தண்ணீரின் ஆடையாவதும் காலங்காலமாய்க் கழுவப்படாத கண்ணீர்ப் பிசுக்கில் எண்ணெய்ப் பிசுக்கும் ஏறி நிற்பதும் மீனென்ற வேட்டைப் பொருளும் கொக்கென்ற வேட்டையாடு பொருளும் சேர்ந்து செத்து மிதப்பதும் நதி இறங்க வழியில்லாத கடலில் எண்ணெய் இறங்குவதும் உழைக்கும் மக்கள் பிழைக்க வழியின்றிப் பெருந்துயர் கொள்வதும் எத்துணை கொடுமையென்று சோகம் பகிர்ந்தோம்.‘இதற்கு யார் பொறுப்பு’என்றார் கமல் ‘லாபம் ஈட்டும் நிறுவனம்’ என்றேன். காஃபி கொடுத்தார் பாதிக்குமேல் என்னால் பருகமுடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர்” - வைரமுத்து  

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vairamuthu about bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழக சார்பில் மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர். காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன். இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள். பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

இந்தியன் 2 - பக்கா பிளானில் படக்குழு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
indian 2 audio launch update

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பேர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் தேதி, குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஜூன் 13 வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மே 16ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மே முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் பரவலாக பேசப்படுகிறது. இதையடுத்து பாடல்கள் வெளியீட்டிற்கு பின்பு ட்ரைலர் மற்றும் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.