Skip to main content

“கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” - வைரமுத்து உருக்கம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vairamuthu about udhayam theatre yet to be closed

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருக்கிறது. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது. மேலும் கொரோனோவிற்கு பிறகு திரையரங்கிற்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்கை மூடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

ad

சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.  இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரை வளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன. மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்