உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 8,000 பேராக உயர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்ற துறைகளில் எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது.
அண்மையில் தமிழக அரசு வெள்ளித்திரையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற அனுமதியும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியது. தற்போது சின்னத்திரைக்கு வழங்கிய அனுமதியில் மொத்தமாக 60 பேர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நாளை (31/05/2020) முதல் துவங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து படப்பிடிப்பின் போது, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அதிகபட்சம் 60 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது