Skip to main content

"தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்து, பல மூடப்பட்டுவிடும்"- பாரதிராஜாவுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
tirupur

 

 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு பல கோரிக்கைகளை வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த கடிதத்திற்கு 40 தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.

 

 

இந்நிலையில் இதற்கு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலளித்துள்ளார். அதில், "அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றவில்லை என்றால் படங்களை வெளியிட முடியாது என்கிறார்கள். ஓடிடியில் படங்களை வெளியிடுகிறார்கள், அதற்கு எங்களைக் கேட்டுவிட்டா வெளியிட்டார்கள். இல்லையே.

 

 

படங்களை வெளியிடுவது, வெளியிடாததும் அவர்களுடைய சொந்த விருப்பம். அவர்கள் சொந்த பணத்தைப் போட்டு படம் எடுத்துள்ளார்கள். விருப்பப்பட்டால் வெளியிடப்படும், விருப்பமில்லை என்றால் விட்டுவிடட்டும். நாங்கள் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

 

 

படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்களும் ஐபிஎல் மேட்ச், கல்யாணம் மண்டபம் என மாறிப் போய்க் கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும்போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும். அவர்கள் வைத்துள்ள எந்தவொரு கோரிக்கைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது.

 

 

தயாரிப்பாளர்கள் விபிஎஃப் பணம் கட்டுகிறார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. Service Providers தான் எங்களுக்கு content கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் எங்களுக்கு நேரடியாக content கொடுத்ததே கிடையாது. முதலில் எப்படி பிரிண்ட் முறையில் திரையரங்குகளுக்கு நேரடியாகப் படம் கொடுத்தார்களோ, அதே போல் Service Providers-மும் சொல்லியிருக்க வேண்டியதானே?

 

 

படத்தை பிரிண்ட் போடுவதற்கு 65 ஆயிரம் ரூபாய் இருந்தது. Service Providers அதை 15 ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். உடனே சந்தோஷமாகத் தயாரிப்பாளர்கள் அங்குக் கொண்டு போய் படத்தைக் கொடுத்தார்கள். இப்போது அந்த 15 ஆயிரம் ரூபாயையும் கட்ட மாட்டோம் என்கிறார்கள்.

 

 

இது தமிழ்நாட்டு பிரச்சினையில்லை. இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை. தமிழ்நாட்டில் 400 பிரிண்ட் தான் போடுகிறார்கள். இந்தியில் ஒரு படத்துக்கு 2000 பிரிண்ட் போடுகிறார்கள். அவர்கள் விபிஎஃப் பணம் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் கட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே அதிசயமாக இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

தயாரிப்பாளர்கள் நன்றாகப் பேசட்டும். விபிஎஃப் கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய உரிமை. நாங்கள் அந்தக் கட்டணத்தைக் கட்டுங்கள் என்று கட்டாயப்படுத்தவே முடியாது. எங்களுக்கு வரும் content-ஐ திரையிட முடிந்தால் திரையிடுவோம். தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இன்னும் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்து, பல மூடப்பட்டுவிடும்.

 

 

ஓடிடி தளங்களிலோ, தொலைக்காட்சியிலோ போய் தயாரிப்பாளர்கள் ஜெயித்துவிட முடியாது. தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒரு நடிகரை உருவாக்க முடிந்ததா?. திரையரங்கம் தான் சினிமாவுக்கு முக்கியமான தளம். அங்குப் படங்கள் வெளியிட்டால் மட்டுமே நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காவலாளி... ஏ.வி.எம் வாசலில் நின்று சபதம் எடுத்த பாரதிராஜா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?

 

அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது. 

 

நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும் ஆரம்பித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத் தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.

 

 

Next Story

கண்கலங்கிய பாரதிராஜா... படுத்த படுக்கையில் நடிகர் பாபு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021
barathiraja

 


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அவருடைய ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு.

 

அண்மையில் அவரது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே தனது நடிப்பால் கவனம் பெற்ற பாபுவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 14 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாபு. ஆனால், மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நடித்தபோது பெரும் சோதனை ஏற்பட்டது.

 

ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் நடிகர் பாபு. இருந்தபோதிலும் அவரால் பழையமாதிரி எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன்பிறகு 20 வருடமாக படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

 

நடிகர் பாபுவை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அண்மையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றிருந்தார். அப்போது அவர் கண்கலங்கி நடிகர் பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார். கஷ்டத்தில் இருக்கும் பாபுவின் மருத்துவ உதவிக்காக நிதியுதவி அளித்துவிட்டு வந்துள்ளார்.பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.