
மைசூர் சாண்டல் சோப்பை தயாரிக்கும் கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்(KSDL) நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். இரண்டு வருடத்துக்கு ரூ.6.20 கோடி சம்பளம் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கர்நாடக தொழில் துறை அமைச்சர் பாட்டில் நேற்று வெளியிட்டிருந்தார்.
கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு கன்னட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. கன்னட திரையுலகில் திறமையான நடிகைகள் இல்லையா? ஏன் பாலிவுட் நடிகையான தமன்னாவை நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கன்னட அமைப்புகளும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாட்டில் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், “கன்னட திரைத்துறை மீது KSDL மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறது. சில கன்னட படங்கள் பாலிவுட் படங்களுடன் போட்டி போடுகின்றன. கர்நாடகாவிற்குள் மைசூர் சாண்டலை வலுப்படுத்த வேண்டும். அதையும் தாண்டி வெளி மார்க்கெட்டில் தீவிரப் படுத்த வேண்டும். எனவே, பல்வேறு மார்க்கெட் நிபுணர்களைக் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒரு விளம்பர தூதர் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் 2028 ஆம் ஆண்டுக்குள் KSDL 5000 கோடி ஆண்டு வருவாயை எட்ட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என தெரிவித்திருந்தார்.
மைசூர் சாண்டல் சோப்பு 1916 ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜாவால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதல் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனி 2006ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.