Skip to main content

அந்த ஒரு ட்விஸ்டுக்காக... சுட்டுப்பிடிக்க உத்தரவு - விமர்சனம்

Published on 22/06/2019 | Edited on 23/06/2019

ஹீரோ ஹீரோயின், குத்துப் பாடல்கள், இரண்டாம் பாதியில் ஒரு மெலடி, பஞ்ச் டயலாக்ஸ், மாஸான பைட் சீக்குவன்ஸ்... இதெல்லாம் ஒரு படத்தில் கட்டாயம் இருக்கவேண்டும், அப்பொழுதுதான் அது சுவாரசியமாக இருக்கும், முக்கியமாக வெற்றி பெற முடியும் என்ற காலத்தைத் தாண்டி தமிழ் சினிமா வெகு தொலைவு வந்துவிட்டது ஒரு மகிழ்ச்சியான விஷயம். அந்த விஷயங்களெல்லாம் தவறானவை அல்ல, என்றாலும் அவை இல்லாமல் படம் வெற்றி பெறாது என்ற சூழலும் நம்பிக்கையும் தவறானது. இந்த புதிய அலையில் அடுத்த படமாக ஒரு முயற்சி 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'.

 

mysskin



விக்ராந்த், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது குழந்தையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாததால் நண்பர்களான சுசீந்திரன் மற்றும் இருவருடன் சேர்ந்து கோவையில் ஒரு பெரிய வங்கியில் கொள்ளை அடித்துவிட்டு அங்கு இருக்கும் சிலரை கொன்றுவிட்டு ஆர்.எஸ்.புரம் என்ற ஏரியாவிற்குள் தப்பி சென்று ஒளிந்து கொள்கின்றனர். இவர்களை பின்தொடர்ந்து கொண்டே கமிஷ்னர் மிஷ்கினின் போலீஸ் படையும் ஏரியாவுக்குள் புகுந்து அவர்களை சுற்றி வளைக்கிறது. இதற்கிடையே அதே பகுதியில் தங்கியிருக்கும் சில தீவிரவாதிகள் குண்டு வைத்து அந்த இடத்தை சின்னாபின்னமாக்க திட்டமிடுகின்றனர். இதற்கு நடுவில் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் விக்ராந்த், சுசீந்திரன் திருட்டு கும்பலுக்கும், போலீசுக்கும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதையடுத்து இந்த துப்பாக்கிச்சூட்டில் யார் வென்றார்கள், திருட்டு கும்பல் போலீஸ்காரர்களிடம் பிடிபட்டார்களா, தீவிரவாதிகளின் சதி திட்டம் என்னவானது என்பதே பரபரக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் கதை.

 

 

vikranth



'வந்தமா... சட்டுபுட்டுன்னு வேலையை ஆரம்பிப்போம்' என்பதுபோல் முதல் ஷாட்டில் இருந்தே கதை ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் சின்ன சின்ன திருப்பங்களோடு செல்லும் படம் போகப்போக வேகமெடுக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படுத்தாமல் பரபரவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று ஒரு மிகப்பெரிய திருப்பத்தோடு முடிந்து கைதட்டல்கள் வாங்கியுள்ளது. முக்கியமாக எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத காட்சிகள் என எதையுமே வைக்காமல் மிகவும் புத்திசாலித்தனமாக கதையை நகர்த்தி உள்ளார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதேபோல் படத்தில் பயன்படுத்திய அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது கதையோட்டத்திற்கு வலு சேர்க்கிறது. போகிற போக்கில் சுட்டுக்கொண்டே போவதும் அதுல்யா பாத்திரம் கொஞ்சம் அதிகமாகப் பண்ணுவதும் சற்றே உறுத்துகின்றன.

 

suseenthiran



விக்ராந்த், கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து ரசிக்க வைத்துள்ளார். இவருக்கும் குழந்தைக்கும் உண்டான நெகிழ்ச்சியான காட்சிகளில் இருவரும் நன்றாக ஸ்கோர் செய்கின்றனர். சுசீந்திரனுக்கு அதிகம் வசனம் இல்லை, நடிப்பதற்கும் பெரிய வாய்ப்புகள் இல்லை, இருந்தும் கவனம் ஈர்த்துள்ளார். படத்தின் இன்னொரு நாயகனாக வரும் மிஷ்கின் படத்தின் ஜீவனாக இருந்து கரை சேர்த்துள்ளார். இவரின் அனுபவமிக்க நடிப்பும், துடுக்கான செயல்களும் கதையோட்டத்திற்கு நன்றாக உதவி அயர்ச்சியை தவிர்த்து உள்ளன. லோக்கல் பெண்ணாக வரும் அதுல்யா பாத்திரம், 'கொஞ்சம் ஓவரோ' என்று தோன்ற வைத்தாலும் ரசிக்க வைத்துள்ளார்.


ஜோக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசையும், ராமாராவின் படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்தை நன்றாக கூட்டி உள்ளன. குறிப்பாக படத்தொகுப்பாளர் ராமாராவ் படத்தின் திரைக்கதையின் முக்கியத்துவத்தை அறிந்து கத்திரியை நன்றாக உபயோகப்படுத்தியுள்ளார். சந்துகளுக்குள் புகுந்து விளையாடும் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் வேகமெடுத்து இருக்கின்றன.

படத்தில் சில பல தொய்வுகள் இருந்தாலும் இறுதியில் வரும் திருப்பம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் வலிமையுடன் இருப்பது சிறப்பு. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.