Skip to main content

"பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க" - கார்த்தியின் ட்ரைலர் குறித்து சூர்யா

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

suriya tweet about karthi sardar trailer

 

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார்'. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.  

 

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரைலரை பார்க்கையில், விஜய் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் கார்த்தி. விளம்பர பிரியராக இருக்கும் கார்த்தி 'நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் நாற்பதாயிரம் பேருக்கு தெரியுற மாறி பண்ணனும்' என்று பேசும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிறகு நேஷனல் அளவில் ட்ரெண்ட் ஆவதற்கு பழைய ராணுவ ரகசியம் தொடர்பான கோப்புகள் தொலைந்து போவதாகவும் அதனைத் தீவிரமாக அரசு தேடி வருவதாகவும் அவரின் காதுக்கு தகவல் வருகிறது. 

 

அந்த ரகசிய கோப்புகளை கண்டுபிடிக்க கார்த்தி முயற்சிக்கிறார். அப்போது உளவாளியாக இருக்கும் மற்றொரு கார்த்தியை இவர் சந்திப்பது போலவும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஆக்ஷன் கலந்து சஸ்பென்ஸ் த்ரில்லிங்குடன் கதை சொல்லியிருப்பது போல் தெரிகிறது. ட்ரைலரின் இறுதியில் 'பத்தவச்சு பறக்க விடப்போறோம்' என்று இடம்பெறும் வசனம் படத்தில் மாஸ் மொமெண்ட்டாக இருக்கும் என்பதை உணரமுடிகிறது. இதற்கிடையில் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணாவுடன் காதல் காட்சிகள் வருவதுபோல் அமைந்துள்ளது. யூட்யூபில் வெளியான இந்த ட்ரைலர் தற்போது வரை 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. 
 

இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா, "என்ன ஒரு வலிமையான கவனம் ஈர்க்கக்கூடிய ட்ரெய்லர். வலுவான கதையைப் பற்றி பேசுகிறது” எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரைலரில் கார்த்தி பேசும் வசனத்துக்கு பதிலளிக்கும் வகையில் "பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்