Skip to main content

“அவரோட காமெடியால தற்கொலை பண்ணிக்க போனேன்”- சிவகார்த்திகேயன் கலகலப்பு பேச்சு

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தற்போது ரியோவை வைத்து பிளான் பண்ணி பண்றோம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரியோவுடன் ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அண்மையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். 
 

sivakarthikeyan

 

 

அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், “ பத்ரி சாருடைய 'பாணா காத்தாடி' படமும், பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். அவரும் யுவன் சாரும் கூட்டணி என்றாலே அதுவொரு தனி ஃபீல். அவர் இதுவரை செய்த படங்களை விட, இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். முழுமையான காமெடி படமாக செய்திருக்கிறார்.

ரியோ மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் இருக்கும்போது சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு. தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு. அதெல்லாம் இந்த மேடையில் பார்ப்பதால் கூடுதல் சந்தோஷம் தருகிறது.

'அயலான்' படத்தில் பாலசரவணனுடன் பணிபுரிந்தேன். ஒரு மலை மீது படப்பிடிப்பு. அங்கிருந்து ஓட முடியாததால் அவருடன் 10 நாட்கள் பணிபுரிய வேண்டிய சூழல். அவர் பேசுவது அனைத்துமே சுவாரசியமாக இருக்கும். படப்பிடிப்புத் தளத்தில் சரியாக 1:30 மணிக்கு அவ்வளவு ஆர்வமாக இருப்பார். மதிய இடைவேளை விட்டவுடனே, இதைச் சாப்பிடலாமா, அதைச் சாப்பிடலாமா என்று கேட்பார். அவரோடு சேர்ந்துதான் நிறைய சாப்பிடக் கற்றுக் கொண்டேன். நடுவில் நானும் அவரை மாதிரி குண்டாக இருந்தேன். அதற்கு அவர் தான் முக்கியக் காரணம். மதுரை வட்டார மொழி ரொம்பவே பிடிக்கும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ரோபோ ஷங்கர் அண்ணன் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. எப்போதுமே ஜாலியாக இருப்பார். தங்கதுரையின் ஜோக்குகளால் தற்கொலைக்கு முயன்ற பலரில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. இதெல்லாம் ஜோக்கா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதையே ட்ரெண்டாக்கிவிட்டார்.

நான் யுவன் சாருடைய பெரிய ரசிகர். ரம்யா நம்பீசன் படம் பண்ணுகிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் இயக்கிய குறும்படம் பார்த்தேன். அது அதிகமான தாக்கத்தைக் கொடுத்தது. அந்தக் குறும்படம் பார்க்கும் போது யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயங்கரமான படைப்பு வரும் என உணர்ந்தேன். கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம்.

ரியோவுக்கு இந்தப் படமும் வெற்றி பெறும். உங்களுடைய எந்த விழாவிலும் நான் இருப்பேன். ஏனென்றால் உங்கள் மீது எனக்கு ஸ்பெஷல் கேர் உண்டு. நான், டிடி, ரியோ மூவருமே பிப்ரவரி 17-ம் தேதி பிறந்தவர்கள். அனைவருமே என் நண்பர்கள் என்பதால், இதை என் படமாகத்தான் பார்க்கிறேன். கண்டிப்பாக ஹிட்டாகும்.

சினிமா என்பது இப்போது மக்களிடம் கிடைக்கும் வார்த்தைகள் மூலமாகப் பெரிய வெற்றி பெறுகிறது. விளம்பரங்களைத் தாண்டி அது ரொம்பவே அதிகரித்துவிட்டது என நம்புகிறேன். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் இன்று மக்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல் இதுவும் பெரிய ஹிட்டாகும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காற்று அசைவதால் நமது கொடி பறக்காது” - நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயேன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
sivakarthikeyan about Major Mukund Varadarajan on his 10th passed away anniversary

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நாளில் இன்று காலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜன், நினைவு பலகைக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரை நினைவுகூறும் விதமாக அவர் வாழ்க்கை கதை அடங்கிய சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்காது, அதைக் காத்து வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் மரியாதை செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.