தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்து வருகிறது.
இதற்கிடையே இப்படத்தில் சிம்புவிற்கு தாயாக நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகி வந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு ராதிகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து நடிகர் சிம்பு உடல் மிகவும் மெலிந்து சிறு வயது தோற்றத்தில் புல்லட்டில் பயணிக்கும் போட்டோ ஒன்றும் சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பின் முடிவில் நடிகர் சிம்பு முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு மிகவும் மெலிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது.