அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய தலைமையில் புது தயாரிப்பாளர் சங்கம் உருவாகியுள்ளது.
இன்று, அந்தச் சங்கத்திற்கான அறிமுக விழா நடைபெற்றது. அதில், இந்தப் புதிய சங்கத்தின் தலைவராக, டி.ராஜேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஜே.எஸ்.கே சதிஷ், பொருளாளராக கே.ராஜன், துணைத் தலைவர்களாக பி.டி.செல்வகுமார் மற்றும் ஆர்.சிங்காரவடிவேலன், இணைச் செயலாளர்களாக கே.ஜி.பாண்டியன், எம்.அசோக் சாம்ராஜ் மற்றும் 'சிகரம்' ஆர்.சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய சங்க அறிவிப்பால் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சங்க உறுப்பினர்களால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அதில், “புதிய, சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்
வி.பி.எஃப் போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவினங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.
திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கித் தவிக்கும் சிறு படத் தயாரிப்பாளர்களின் படங்களைத் திரையிடுவதற்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.
எஃப்.எம்.எஸ், ஓ.டி.டி, சாட்டிலைட் மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தைப் பெருக்கி லாபம் எடுக்க முயற்சி மேற்கொள்வோம்.
பட வெளியீட்டின் போது ஏற்படும் பல விதச் சிக்கல்களை, இயன்றவரைச் சுமுகமாகப் பேசி தீர்க்க ஆவண செய்வோம்” என்று தீர்மானம் எடுத்திருக்கின்றனர்.
மேலும், இந்தச் சங்கத்தில் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான உஷா ராஜேந்தர், எஸ்.டி.ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரான சிலம்பரசன் ஆகியோர் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.