![vgsgasd](http://image.nakkheeran.in/cdn/farfuture/7tuWD7EefFht5uZ2iv7YH3KK5gAyL_FW6cDt9c2CqNo/1621077331/sites/default/files/inline-images/film-shoot.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![bghsh](http://image.nakkheeran.in/cdn/farfuture/uTwHEIsnAIwdtknwaAO7z-RcLKBpoQHzSpz8c5tQMXM/1621077347/sites/default/files/inline-images/RK_Selvamani_At_The_Irumbuthirai_Success_Meet.jpg)
இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு நடிகர் அஜித் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.