Skip to main content

“கலைஞரின் ஒரு வசனத்தையாவது வைப்பீங்களா என முரசொலி மாறன் கேட்டார்” - சத்யராஜ்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

sathyaraj speech in manivannan book release function

 

எழுத்தாளர்  ஜீவ பாரதியின், 'இயக்குநர் மணிவண்ணனும் நானும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார். 

 

பின்பு மேடையில் பேசிய சத்யராஜ், "இந்த புத்தகத்தில், நூறாவது நாள் படத்தின் அனுபவம் குறித்து எழுதியிருந்தார்கள். அதில், நாங்கள் ஒரு முறை 'எங்கேயும் கங்கை' திரைப்பட கலந்துரையாடலுக்காக அழகர் மலை சென்றிருந்தோம். அங்கு படத்தின் கதையை குறித்து பேசாமல், சாப்பிடுவதும் தூங்குவதுமாக நாட்கள் கழிந்தது. அப்போது தயாரிப்பாளர் கலைஞானமிடம் கேட்டேன், படத்தின் கதை பற்றி எப்போது விவாதிப்போம் என. அவர் அதற்கு, 'யோவ் இழுத்து வைத்து குத்தினால், கதை செத்துப் போயிவிடும். எனவே பொறுமையாக வரட்டும்' என்றார். அடுத்த நாள் காலை முதல் ஆளாக எழுந்து செய்தித்தாளை பார்த்தேன். அதில், 'ஒன்பது பேர் ஒரே குடும்பத்தில் கொலை. நூறாவது நாள் படம் பார்த்து கொலை உணர்வு ஏற்பட்டது என்று ஜெயப்ரகாஷ் பேட்டி' என தலைப்புச் செய்தி வந்தது. பின் மாலை மதுரையிலுள்ள தியேட்டருக்கு சென்றால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு மட்டுமே இருந்த ஜனத் திரள் நான் நடித்த படத்திற்கும் இருந்தது.

 

படம் மிகப்பெரிய வெற்றிபெற, எனக்கும் கொடூர வில்லன் என்ற பெயர் கிடைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, நான் இயக்குநராகவும் முக்கிய வில்லனாகவும் இயங்கியது 24 மணி நேரம் படத்தில் தான். அதில் நான் பேசிய 'ஏன் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே' வசனம் மிகப் பிரபலமானது. அதேபோல அன்பின் முகவரி படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனை நடிக்க வைத்ததும் சவாலாகத் தான் இருந்தது. ஏனெனில், அவர் முன்பு டப்பிங் பேசிய முறை முற்றிலும் வேறு. நாங்கள் பயன்படுத்தியது லூப் சிஸ்டம். எனவே, எஸ்.எஸ்.ஆர்-ன் தோளை ஒவ்வொரு வசனம் வரும்போதும் தட்டிக்கொடுத்து பேசவைத்தோம். மிகப் பெரிய வசனங்களை எல்லாம் எளிதில் பேசக் கூடியவர் எஸ்.எஸ்.ஆர்., ஆனால் இந்த நவீன டெக்னாலாஜியால் சற்று தடுமாறினார். அப்போது ஜீவ பாரதி தான் உதவினார். இதுபோன்று ஒருமுறை கலைஞர், நெல்சன் மண்டேலா கட்சியில் இருந்த ஒரு உறுப்பினரின் பெயரை மறந்துவிட்டார்.  உடனே ஜீவ பாரதி அதனை சொன்னார். பின்பு தான் தெரிந்தது கலைஞர், ஜீவ பாரதியை சோதித்து பார்த்திருக்கிறார் என. ஏனென்றால், எதையும் எளிதில் மறக்கக் கூடிய நபரில்லை கலைஞர்.

 

தற்போது உள்ள இயக்குநர்கள் ஒரு வருடத்திற்கு 1 படம் தான் எடுக்கிறார்கள். ஆனால், மணிவண்ணன் ஒரே சமயத்தில் நான்கு படம் வரை இயக்கியுள்ளார். உதாரணமாக, பாலைவன ரோஜாக்கள் இயக்கும் போதே திருப்பூர் மணி 'விடிஞ்சா கல்யாணம்' படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். அப்போது மணிவண்ணன் கதையை யோசிக்கக் கூடவில்லை. இருந்தும், தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் அடுத்த வாரம் படப்பிடிப்பு வைக்க சம்மதித்து விட்டார். நான் மணிவண்ணனிடம் கேட்டேன், கதையே இன்னும் தயாராகவில்லையே என. அவர் சொன்னார், ‘அதெல்லாம் பாத்துக்கலாம் ஒரு வாரம் இருக்கே’ என சொல்லிவிட்டார். பிறகு மணிவண்ணன், 'யோ என்னையா கதை வந்தா சொல்லமாட்டோமா' என நகைச்சுவையாக நக்கலடித்தார். பின்பு, குடும்பப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சுஜாதவை கொலையாளியாக சித்தரித்து ஒரு படம் எடுப்போம் எனத் தீர்மானித்து. அடுத்த நாள் கதை பற்றி பேசுவதற்கு விஜிபி கடற்கரை சென்றுவிட்டோம்.

 

அங்கு உரையாடும் போது சொன்னேன், சிவாஜி நடித்த புதிய பறவை, ஒரு ஆங்கில நாவலை தழுவி மாற்றி எடுத்தார்கள். நாம் புதிய பறவையை மாற்றி எடுப்போம் என்றேன். எனவே, படத்தின் முதல்பாதியை மதிய உணவு நேரத்திற்கு முன்பே தயார்செய்து விட்டார் மணிவண்ணன். அடுத்து இரண்டாம் பாதி வீடு திரும்புவதற்குள் முடித்துவிட்டார். பின்னர், இந்த கதையை தயாரிப்பாளரிடம் 'விடிஞ்சா கல்யாணம் அதற்குள் குடும்பத்தில் ஆயிரத்து எட்டு சிக்கல்' என சொல்லி படத்தை எடுத்தோம். இதனையடுத்து பாலைவன ரோஜாக்களும், விடிஞ்சா கல்யாணம் படமும் ஒரே நாளில் வெளிவந்து நூறு நாள் ஓடியது. இதுபோன்று சிவாஜிக்கும் விஜயகாந்துக்கும் படங்கள் ஓடியுள்ளது. ஆனால், ஒரே இயக்குநர், ஒரே கதாநாயகன் என்ற முறையில் என்னுடையது முதல் வெற்றி. விடிஞ்சா கல்யாணம் படத்திற்கு இளையராஜா பாடல்கள் அமைத்தாலும், ரீ-ரெகார்டிங் எம்.எஸ்.வி தான். அவரைப் போன்று தன்மையான நபரை பார்த்ததில்லை நான். ஏனென்றால் அத்துனை பெரிய இசையமைப்பாளர், ஜீவ பாரதியிடம் இசைத்துவிட்டு நன்றாக இருக்கிறதா என கேட்டார். இது போன்று ஆர்.சுந்தரராஜன் அவருக்கும் நடந்ததுள்ளது.

 

பின்னர், முதல் வசந்தம் படத்தின் 50வது நாள் விழாவில், ஜீவ பாரதி நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து பின் செல்வார். அதேபோன்ற காட்சியைத் தான் அமைதிப்படையில் பயன்படுத்தி இருப்போம். அந்த காலத்தில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போதே நினைத்துக் கொள்வேன், 'நாம் சினிமாவில் வளர்ந்துவிட்டால் பெரிய நடிகர்கள் மத்தியில் சிகெரட் பிடிப்பது திமிராகத் தெரியும். அதனால, இப்பவே பிடிச்சிப்போம்' என்று எண்ணுவேன். தொடர்ந்து, வியாசர்பாடியில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு என்னை அழைத்து சென்றார்கள். அதில், நான் பேசும்போது, 'கம்யூனிஸ்டுகள் தான் நிஜ ஹீரோ' என பேசினேன். அதற்கு காரணம், நாங்கள் எல்லாம் ஒரு வழக்கு பாய்ந்தாலே ஓடிவிடுவோம். ஆனால் இவர்கள் வழக்குகளுக்கு நடுவே படுத்து தூங்குகிறவர்கள். 

 

இப்படி ஒரு நாள் மணிவண்ணன் சுவற்றில், கம்யூனிஸ்ட் சின்னத்தை சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில் வரைந்து கொண்டிருந்தார். உடன் தோழர் கல்யாண சுந்தரமும் இருந்தார். இப்படியும் மணிவண்ணன் இருந்துள்ளார். இவருக்கும் மற்ற இயக்குநருக்கும் உள்ள வித்தியாசம், 'பிறர் எழுதியதை எடுப்பார்கள். மணிவண்ணன் எடுத்ததை எழுதுவார்...'. இதனை மனோரமா ஒரு முறை நினைவுபடுத்தி கூறியுள்ளார். அந்தளவு மணிவண்ணன் வசனங்களை எழுதுவதில் வல்லவர். இப்படியாக, பாலைவனச் சோலை படத்தின் வசனத்தை கலைஞர் தான் எழுதினார். ஆனால், அதனை நாங்கள் டிரென்டுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினோம். அப்போது, தயாரிப்பாளர் முரசொலி மாறன் எங்களிடம், 'கலைஞரின் ஒரு வசனத்தையாவது வைப்பீங்களா' எனக் கேட்டுவிட்டார். இருந்தும் கலைஞர் சொல்ல வந்ததைத் தான் மணிவண்ணன் தற்கால சூழலுக்கு தகவமைத்து எழுதியிருப்பார். தொடர்ந்து நான், சத்யா மூவிஸ் நிறுவனத்தில் நடித்து வந்ததால் மற்றொரு படமும் என்னை வைத்து எடுக்க திட்டமிட்டனர். அப்போது மணிவண்ணனை இயக்குநராக வைத்து படம் எடுக்கலாம் என்றேன். ஆனால், ஆர்.எம். வீரப்பன் கொஞ்சம் எடிட்டிங் வேலைகளிலும் ஈடுபடுவார் என்பதனை மணிவண்ணனிடம் சொன்னேன். அவர், 'அட விடுப்பா.... கலைஞரையே ஏமாத்திட்டோம்' என நக்கலடித்தார். இன்னும் இந்த புத்தகத்தை பற்றி நிறைய பேசிக்கொண்டு போகலாம். இதில் இருக்கும் நெருக்கமான சில பகுதிகளுக்கு நான் செல்ல வேண்டாம் என்று தான் மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பேசுகிறேன்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"மேலோட்டமா பாத்தா ஆபத்துகள் தெரியாது" - சத்யராஜ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
sathyaraj speech in dmk stage

தி.மு.க சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா - சுய மரியாதைச் சுடர் திராவிட இனமானத் தொடர்’ எனும் தலைப்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் புகழரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் பா.விஜய் மற்றும் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், “பா. விஜய் பேசுனதில் ரொம்ப முக்கியமான விஷயம். வட நாட்டிலிருந்து மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வரலாம்னு பார்க்குது. அதை விட்ராதீங்க என பேசினார். அதை விடமாட்டோம். ஏன்னா, தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். வட நாட்டு காரவங்களுக்கு தான் அது மதப்புயல். இங்க இருக்கிறவங்களுக்கு அது மடப்புயல். இங்க இருக்கிற எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பி போல பழகிட்டு வரோம். எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும் மற்றவர்களோடு ஒன்னு மண்ணா தான பழகிட்டு இருக்கோம். இப்படி இருக்கும் போது இங்க மதத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது.  

எல்லாருமே ஒற்றுமையா இருக்கிறோம். இது எப்படி பண்ண முடியும். இது நீதி கட்சியினுடைய நீட்சி தான் என தோழர் அருள்மொழி சொன்னாங்க. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து பள்ளிகூடத்தை ராஜாஜி மூடினார். மூடுவதற்கு முன்னாடி யார் திறந்தாங்க என்பதை அருமையாக சொன்னாங்க, நீதி கட்சி திறந்து வத்த பள்ளி அது. நீட் தேர்வுக்கு முன்னாடியே பெரிய கேட் அந்த காலத்தில் போட்டிருக்காங்க. அது சரியா தவறா என தெரியவில்லை. நீதி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, மெடிக்கல் காலேஜ் சேருவதற்கு சான்ஸ்கிரிட் தெரிஞ்சிருக்கனும். இதை விட சூப்பர் காமெடி யாருமே பண்ண முடியாது. மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்மந்தம். அப்படி ஒரு திட்டம் வைத்தால் தான் நம்ம புள்ளைங்கெல்லாம் சேர முடியாது. இப்போ அதே திட்டத்தை நீட் என கொண்டு வராங்க. நம்மளை படிக்க விடக்கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு எதையோ பண்றாங்க. ஆனா நம்ப படிச்சிகிட்டே இருக்கோம். இன்னைக்கு எல்லா இடத்துலையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவங்க பெரியளவில வந்துட்டாங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப் பெரிய சாதனை” என்றார். 

மேலும் “பாம்பேவுக்கு ஷூட்டிங்கிற்காக இப்போது போனேன். அங்கு பீப் ஸ்டாலே கிடையாது. அப்போ... எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என முடிவெடுக்க வேண்டியது நான் தானே, நீ எப்படி முடிவெடுக்கலாம். இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது. இங்க இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், ஜாதியை சேர்ந்தவர்களும் ரொம்ப ஒத்துமையா இருக்கோம். அது சீர்குலைந்து போகக் கூடாது. நாம் முன்னோக்கி தான் போகணும்” என்றார். 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார்.