Skip to main content

“வடிவேலு நிச்சயம் அழுதிருப்பார் அவரும் மனிதர் தானே” - சரத்குமார்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
sarathkumar about vadivelu in vijayakanth Memorial mee

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், “விஜயகாந்தின் சில விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் பண்பு, இதுபோன்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவருடைய புலன் விசாரணை படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அப்போது ஒரு காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. 3 நாள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால் உடனே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். என்னை பார்த்ததும் விஜயகாந்திற்கு அதிர்ச்சி. ஏன் இப்படி பண்றீங்க என என்னிடம் கடிந்து கொண்டார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு, ‘இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பேரு. அதுக்கப்புறம் தான் மத்தவங்க’ என்றார். அப்படி சொன்ன பெருந்தன்மை வேறொரு எந்த கதாநாயகனுக்கும் இருக்காது. கேப்டன் பிரபாகரன் முடிந்தப்போ கூட மன்சூர் அலிகானுக்குத் தான் இந்த படத்தில் முதல் பேரு என்றார்.  

அவர் கோவம் உள்ளவர் என எல்லாருக்கும் தெரியும். கோவம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அப்படிப்பட்ட குணம் படைத்தவர் தான் அவர். கோவத்தை உடனே மறந்துவிடுவார். இவன் இப்படி பேசிட்டான், இவன ஏதாவது பண்ணனும் என்று நினைத்ததே கிடையாது. வடிவேலு வரவில்லையே என என்னிடம் கேள்வி கேட்டபோது, வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். அவரும் மனிதர்தான். வர முடியலேயே, வந்தால் ஏதாவது திட்டுவாங்களோ என நினைத்திருக்கலாம். ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த் அவர்கள், இதையெல்லாம் பெரிதாக எடுத்திருக்க மாட்டார். வடிவேலு நிச்சயமா அழுதிருப்பார் என்றேன். 

தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ள வரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. தமிழ் சமுதாயமும் மறப்பதில்லை. அதனால் அவர் விட்டுச் சென்ற சமுதாய பணிகளை நாம் செய்வோம்” என்றார்.  

சார்ந்த செய்திகள்