Skip to main content

தலைவி படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்!

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் தலைவி என்றொரு படத்தை எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார். இவ்விருவரின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் வெளியாகி ரசிகளின் வரவேற்பை பெற்று வருகிறது.
 

aravind swamy

 

 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்நிலையில், தலைவி படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எம்ஜிஆரின் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு ஜூன் 26ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் சாமியுடன் மோத ஆர்வமாக இருக்கும் கார்த்தி

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

karthi premkumar movie update

 

ராஜுமுருகன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை முடித்துவிட்டு 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் அந்தப் பதிவில், "என்னுடைய அடுத்த படம் அழகான காதல் கதையை வழங்கிய 96 பட இயக்குநர், பிரேம்குமார் இயக்கத்தில் தான். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிக்கின்றனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2டி நிறுவனம் விரைவில் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த கார்த்தி பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

எனவே 2டி நிறுவனம் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், கடைக்குட்டி சிங்கம், விருமன் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

 

 

 

Next Story

“தலைவி படத்தில் நடிக்கக் காரணம் இதுதான்” - கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரகசியத்தை உடைத்த நாசர்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 Actor Nasar - Kalaignar - Thalaivii Movie

 

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

நிகழ்வில் நாசர் பேசியதாவது: “கலைஞர் அவர்களைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் எனக்கு இருக்கின்றன. கலைஞரோடு நான் பழகிய தருணங்கள் என் வாழ்க்கையில் மிகச் சிறந்தவை; மறக்க முடியாதவை. அப்படிப்பட்ட தருணங்களை எனக்கு வழங்கிய என் கலைஞருக்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். பள்ளியில் நாடகங்களில் நடிக்கும்போது அவருடைய வசனங்கள் தான் எங்களுக்கான முதல் பயிற்சி. கலைஞருடைய வசனங்களைப் பேசுவதில் ஒரு பெரிய சுகம் இருக்கிறது. நான் பல போட்டிகளில் அவருடைய வசனங்களைப் பேசி பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.

 

சினிமா வாய்ப்பு வாங்குவதற்குக் கூட பராசக்தி வசனங்களைத் தான் நான் பேசினேன். நான் அரசியல்வாதி அல்ல. ஆனால் அரசியலை அறிந்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அறிவுரீதியாக நான் அரசியலைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். தான் எழுதிக் கொடுத்த வசனங்களை எவ்வாறு படமாக்குகிறார்கள் என்பதை கலைஞர் பெரும்பாலும் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்று பார்ப்பார். என்னுடைய கலைவாழ்வில் முக்கியமான ஒரு படைப்பு கலைஞர் எழுதிய தென்பாண்டி சிங்கம் நாடகம். 

 

கலைஞர் என்னை வீட்டுக்கு அழைத்தபோது பதற்றத்துடன் சென்றேன். அங்கு அவர் அவராகவே இருந்தார். என்னை அவ்வளவு அன்புடன் நடத்தினார். அவர் எழுதிய பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் போன்ற எளிமையான மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் என்னை பயமுறுத்தும் ஒரு தலைவனாக எப்போதுமே இருந்ததில்லை. ஒரு உறவினர் போல் என்னோடு அவர் பேசுவார். அதே நேரத்தில் தான் நம்புகின்ற கொள்கைக்கு எதிராக இருப்பவர்களிடம் தீப்பிழம்பாக அவர் நிற்பார். அதுதான் கலைஞர். 

 

அவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு செய்தி. ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு கொள்கை. சமீபத்தில் வெளிவந்த 'தலைவி' என்கிற படத்தில் நான் கலைஞராக நடித்தேன். நான் ஆராதிக்கின்ற ஒரு மனிதனாக நான் நடிப்பது என்பது மிகப்பெரிய பெருமை. அதையே என் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். அவருடைய இளம் வயதில் அவர் பேசிய பேச்சுக்கள் நேற்று பேசியவை போல் இருக்கின்றன. சினிமாவில் எவ்வளவோ வேடங்களில் நடித்திருந்தாலும் கலைஞர் வேடத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு பதற்றம் இருந்தது. மிகுந்த பெருமித உணர்வோடு அதில் நான் நடித்து முடித்தேன். கலைஞரை நான் காலம் முழுவதும் கொண்டாடுவேன்.”