Skip to main content

"எந்த மாநிலத்திலும் இப்படி இல்லை, முதல்வர் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும்" -  முதல்வருக்கு ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை 

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

RK Suresh

 

கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஜோசப் திரைப்படம், விசித்திரன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். 

 

இப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைக் காண நடிகர் ஆர்.கே.சுரேஷ் திரையரங்கிற்கு வருகை வந்தார். ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆர்.கே.சுரேஷ், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,  "தமிழ்நாட்டில் இந்திப்படம், இங்கிலீஷ் படம், தெலுங்குப்படம் என பிற மொழிப்படங்கள் 70 சதவிகிதம் வருகிறது. இதனால் சின்னப் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இல்லை. தமிழ்நாட்டில்தான் இப்படி ஒரு பிரச்சனை உள்ளது. சின்னப் படங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான திரையரங்குகள் கிடைத்தால்தான் வாய்மொழியாக கொஞ்சம் கொஞ்சமாக மக்களைச் சென்றடைய முடியும். கர்நாடகாவில் 70 சதவிகிதம் அவர்கள் மொழிப்படங்கள்தான் வெளியாகும். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளோம். 

 

எந்தப் படங்களுக்கு எவ்வளவு திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சீனாவில் ஒரு அமைப்பு உள்ளது. அதேபோல, நம் பக்கத்து மாநிலத்திலும் உள்ளது. அது மாதிரியான ஒன்றை இங்கு கொண்டுவந்தால்தான் சின்னப் பட்ஜெட் படங்கள் மக்களைச் சென்றடைய முடியும்" எனத் தெரிவித்தார். 

 

மேலும், அடுத்த வாரம் டான் என்ற பெரிய திரைப்படம் வெளியாகிறது. இது விசித்திரன், கூகுள் குட்டப்பா மாதிரியான சின்ன படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "உதயநிதி அண்ணன் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர். சினிமாத்துறையில் என்ன பிரச்சனை என்றாலும் உடனே வந்து உதவி செய்யக்கூடியவர். அவரே விநியோகஸ்தராகவும் இருப்பதால் அவருக்கே நன்றாகத் தெரியும். எனவே நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சின்ன படங்களுக்கு 30 சதவிகித திரையரங்குகள் கொடுத்துவிட்டு பிற திரையரங்குகளில் பெரிய படங்களை வெளியிடவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால் எங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்" எனப் பதிலளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காடுவெட்டி படத்தின் ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh kaduvetti release update

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு படத்தின் முதல் பாடலாக ‘வீர பரம்பரடா...’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் கலந்து கொண்டார். ட்ரைலரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. சுரேஷ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh then mavattam movie music director issue

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே. சுரேஷ் தற்போது காடுவெட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கத்தில் மஞ்சள் ஸ்கீரீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்த ஆர்.கே. சுரேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் நடந்த காடுவெட்டி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து பேசினார். 

இப்படத்தை அடுத்து தென் மாவட்டம் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது எக்ஸ் தள பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை எழுதி இயக்குவதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் யுவன் ஷங்கர் ராஜா தென் மாவட்டம் பட போஸ்டர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தென் மாவட்டம் படத்தில் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. யாரும் இது தொடர்பாக பேசவும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்து பதிவிட்ட ஆர்.கே சுரேஷ், “யுவன் சார் நீங்கள் எங்களுடன் ஒரு திரைப்படத்திற்கும் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் இசை அமைப்பாளர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தென் மாவட்டம் படத்தின் புதிய இசை அமைப்பாளர் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.