Skip to main content

பிரபல நடிகையின் சகோதரர் கைது; போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
rakul preet singh brother arrested by telungana police

கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என்னமோ ஏதோ’ படத்தின் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரான அமன் ப்ரீத் சிங்கை தெலுங்கானா போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 2.6 கிலோ போதைப் பொருள் விற்பனைக்காகக் கொண்டுவரவுள்ளதாக அம்மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதனன், நிகில் டாமன் ஆகிய ஐந்து பேரை தெலுங்கானா போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

முன்னதாக, போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்ததன் பேரில் அவர் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்