rajinikanth praises amaran movie team

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தீபாவளிக்கு(31.10.2024) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் நாள் வசூலில் ரூ.42.3 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. இதற்கிடையில் இப்படத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டி இருந்தனர். மேலும் இயக்குநர்கள் அட்லீ, அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அமரன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்துடன் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்த படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment