Skip to main content

"நடிகர்களை தியேட்டரோடு விட்டுடுங்க.. வீடு வரைக்கும் அழைச்சுட்டு வராதீங்க.." - ராதாரவி

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Radha Ravi speech at bakasuran press meet

 

'ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' சார்பாக மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர். 

 

நடிகர் ராதாரவி பேசியதாவது, “ரொம்ப நாளைக்குப் பிறகு ‘பகாசூரனில்’ வில்லன் வேடம் பண்ணியிருக்கேன். படத்தில் அருமையான கதைக்கருவை மோகன் ஜி எடுத்துள்ளார். அவர் எப்போதும் சமூக அக்கறை கொண்டவர். அம்பேத்கர் சாதித்தலைவர் அல்ல; பொதுத்தலைவர் என்று பேசியவர். இப்படத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் சிறந்த நடிகருக்கான விருதை பெருவது நிச்சயம். காட்சிகளில் நடிக்கும்போது அவரை வாடா போடா என்று பேசவேண்டும். ஆனால் அப்படி பேசியபோது எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. இந்தப்படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். நடிகர்களை தியேட்டரோடு விட்டுடுங்க... வீடு வரைக்கும் அழைச்சுட்டு வராதீங்க. இறுதியாக, இளைஞர்கள் தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீங்க" என்றார்.

 

தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசியதாவது, "இயக்குநர் மோகன் ஜி புரட்சியாளன். வித்தியாசமான சிந்தனை கொண்டவன். ஏற்கனவே இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ வித்தியாசமாக பேசப்பட்டு, அதன் பிறகு இந்தப்படம் வெளியாகிறது. இதுவும் வழக்கமான கதை அல்ல. இன்றைய சூழலில் வாழ்க்கையை புரட்டிப்போடும் கொடூரமான செய்தி. இந்தப்படத்தில் எனக்கு மிகப்பெரிய வேடத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். பெயரும் உயரத்திற்கு போய்விடும். இது பகாசூரன் அல்ல; பக்கா சூரன்" என்றார். 

 

இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ் பேசியதாவது, ”சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது 65 வயதுள்ள ஒரு அம்மா ‘என் அப்பன் அல்லவா’ பாடலை பாராட்டி பேசினார். ஆனால் அந்தப் பாடலை பாடியது நான்தான் என்று அவருக்கு தெரியவில்லை. கிறிஸ்துவனான நான் இந்தப் பாடலை பாடியது சிலருக்கு கேள்வியை ஏற்படுத்தியது. இசைக்கும் இசையமைப்பாளனுக்கும் மொழி, சாதி பேதம் கிடையாது. இந்த பாடல் உணர்ச்சிகரமாக இருந்து கடவுளுடன் பேசவைத்தால் ஒரு கலைஞனாக நான் பெருமைப்படுகிறேன். இந்தக் கதையை கேட்பதற்கு முன் மோகன் ஜி சாதி ரீதியிலான படங்களை எடுக்கும் இயக்குநர் என்று சொன்னார்கள். ஆனால் இது சாதி கதையல்ல. விழிப்புணர்வு இல்லாத தாய்மார்கள், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம்.”  என்றார். 

 

செல்வராகவன் பேசியதாவது, "இங்கு திறமை இல்லாத யாரும் சதாரணமாக ஜெயித்துவிட முடியாது. மோகன் ஜி கடுமையான உழைப்பாளி, திறமைசாலி. சினிமா மீது அவ்வளவு மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கக்கூடிய நல்ல இயக்குநர். நேரம் காலம் பாராமல் படக்குழுவினர் உழைத்திருக்கின்றனர். நான் இயக்குநராக இருக்கும்போது ஓடிக்கொண்டே இருப்பேன். யாரையும் கவனிக்க, திரும்பிப் பார்க்க நேரம் இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் நடிகராக இருக்கும்போது பெரிய டெக்னீஷியன்ஸ், கலைஞர்கள் சாதாரணமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டப்பிங் யூனியன் தேர்தல்; மீண்டும் தலைவரான சீனியர் நடிகர் !

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Dubbing Union Election - Senior Actor radharavi as President again

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 23 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

ராதாரவி காலில் அடிப்பட்டுள்ளதால், தனது கைத்தடியுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவியாக வந்திருந்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.  

 

Dubbing Union Election - Senior Actor radharavi as President again

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.  மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ராதாரவி 662 வாக்குகள் பெற்று தனது எதிராக போட்டியிட்ட ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரை விட 313 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

இதனிடையே 2024-2026-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16ஆம் தேதி நடந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பேரரசு, பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவராக அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச் செயலாளராக சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட பழனியில் உள்ள சங்கத்தில் நேற்று பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

cinema dubbing union office issue

 

சென்னை சாலி கிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக சினிமா டப்பிங் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடடத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ராதாரவி 45 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த கட்டிடத்தை விதிகளை மீறி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை ராதாரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதிலளிக்காமல் ராதாரவி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 


 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.