![Question about Ajith; Director Ameer Answer](http://image.nakkheeran.in/cdn/farfuture/uDVdgI3FS-ybzTo-W1Li856WXphdxe5-_Sg5A4laCOc/1681798701/sites/default/files/inline-images/Ameer.jpg)
விமல் - தன்யா ஹோப் நடிப்பில் ‘குட்டிபுலி’ சரவண சக்தி இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘குலசாமி’. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு இப்படத்தின் நடிகர் மற்றும் நடிகை வராதது வருத்தமளிப்பதாகப் பேசினார்
அமீர் பேசியதாவது, ”பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளிவந்தது. அதன் முதல் பாகத்தின் புரொமோஷனில் அதில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள். அதே சமயத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியவை பெரிய அளவில் புரொமோஷனாக அமைந்தது. இரண்டாவது பாகத்தின் புரொமோஷனுக்காக அதில் நடித்த நடிகர், நடிகைகள் தனி விமானம் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகப் போகிறார்கள். ஆனால் குலசாமி படத்தின் நடிகரும், நடிகையும் இந்த டிரைலர் வெளியீட்டிற்கு வரவில்லை. அவர்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் இந்த டிரைலர் வெளியீட்டிற்கு வந்திருக்க வேண்டும். வராதது வருத்தமளிக்கிறது” என்றார்.
மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட, ‘அஜித் கூட இதே போல படத்தின் புரொமோஷன் போன்ற நிகழ்வுக்கு வருவதில்லை’ என்ற கேள்விக்கு, ‘ம்க்கும்’ என்று நக்கலாக சிரித்த பின், “யார் வராங்க வரவில்லை என்பது குறித்து பேசவில்லை. வருவது, வராதது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இன்று சினிமா புரொமோஷன் பண்ண வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. முன்பை போல நூறு நாட்கள் ஓடுவதில்லை. முதல் வாரத்தில் கிடைக்கிற வருமானம் தான் லாபமாகும். பெரிய நிறுவனங்களும், நடிகர்களும், இயக்குநர்களும் ஒரு படத்திற்காக போராடுகிறார்கள் எனும் போது சிறிய படத்தின் புரொமோஷனில் கலந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நடிகர், நடிகைகளுக்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.