Skip to main content

''அவர்களை போன்று எங்களுக்கும் அனுமதி கொடுங்கள்'' - அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை! 

Published on 18/05/2020 | Edited on 18/05/2020
gd

 

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் சென்ற வாரம் பல்வேறு நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. இதைத்தொடர்ந்து திரைப்படத் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணியினர்  சார்பில் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்குவதற்கான அறிக்கை காலை வெளியான நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் தற்போது மாண்புமிகு அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை சந்தித்து மீண்டும் ஷூட்டிங் தொடங்க கோரிக்கை மனு வைக்கப்பட்டது. அதில்...


''பெறுநர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்,
திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை.

 

பொருள்: முழுமையடையாமல் நிற்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.

 

தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி, தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை. தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம். 


11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

நன்றியுடன்,
ஷூட்டிங் பணிகளை தொடங்க அனுமதி கோரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சார்பில்:
T. சிவா, இயக்குனர் மனோபாலா, PL. தேனப்பன், JSK. சதிஷ் குமார், G. தனஞ்செயன், R.K. சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு'' என குறிப்பிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்