Skip to main content

''நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். ஏன் தெரியுமா..?'' - பிரேம்ஜி 

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது நடிகரும், இப்படத்தின் இசையமைப்பாளருமான பிரேம்ஜி இப்படம் குறித்து பேசும்போது... 

 

premji

 

 

''நான் கேம் ஓவர் என டிசர்ட் அணிந்ததை பார்த்து எனக்கு திருமணம் ஆகப்போகிறது என முடிவு செய்து விட்டனர். இதனால் பல நண்பர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் வர ஆரம்பித்துவிட்டது. திருமணமானால் வாழ்க்கையின் கேம் ஓவர் என்ற அர்த்தத்தில்தான் நான் அந்த டிஷர்ட்டை அணிந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்று பொறித்த டிஷர்ட்டை தற்போது அணிந்து வந்திருக்கின்றேன். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு 'இசை காட்டேரி' என்று வைத்துக் கொண்டேன்'' என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ் சினிமாவிற்கு வரப்பிரசாதம் - ‘சத்திய சோதனை’ விமர்சனம்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Sathiya Sothanai Interview 

 

ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்து கவனம் ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகி இருக்கும் திரைப்படம் சத்திய சோதனை. தன் முந்தைய படம் போல் இந்தப் படமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றதா?

 

சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு வனாந்தரத்தில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்கிறார். வந்த இடத்தில் அவரை போலீஸ்காரர்கள் பிடித்து வைத்துக் கொண்டு மற்ற நகைகள் எங்கே என அவரை விசாரிக்கின்றனர். இதற்கிடையே கொலை செய்த நான்கு பேரும் போலீசில் சரணடைகின்றனர். அப்பொழுது அவர்கள் வாக்குமூலத்தின் படி பிணத்தின் மீது பல சவரன் நகைகள் இருந்தது தெரிய வருகிறது. போலீசின் கவனம் முழுவதும் பிரேம்ஜி பக்கம் திரும்புகிறது. இதையடுத்து அந்த முழு நகைகளையும் திருடியது யார்? அதைப் போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

தன் முதல் படத்தில் இதேபோல் ஒரு விபத்து மரணத்தைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கி அதைத் திறம்படக் கூறி கவனம் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா, இப்படத்தில் ஒரு கொலை, அதைச் சுற்றி நடக்கும் நகைத் தேடல் சம்பவத்தை மிக ஜனரஞ்சனமாகவும், அதேசமயம் அதை ரசிக்கும் படியும் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று, கைதட்டலும் பெற்று இருக்கிறார். ஒரு சின்னக் கதையை வைத்துக்கொண்டு ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஐந்து ஆறு நடிகர்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் காட்சிகளை அமைத்து மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும் காட்சிகளை நகர்த்தி, அதை ஜனரஞ்சகமாகவும் உருவாக்கி, சிறப்பான திரைக்கதை அமைத்திருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாமல் பார்த்துக்கொண்டு தேவையில்லாத டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கமர்சியல் அம்சங்கள் எதையும் சேர்க்காமல் எதார்த்த சினிமாவை மிக எளிமையாகக் கொடுத்து ரசிக்க வைத்து படத்தை கரை சேர்த்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்த மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு  ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது.

 

Sathiya Sothanai Interview 

 

பிரேம்ஜிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிறப்பான சிறிய பட்ஜெட் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இந்தப் படம் இவருக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் ஸ்வயம் சித்தா. படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஞான சம்பந்தம் அவர்கள், தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்ந்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுள்ளது. சங்குப்பட்டி போலீசாக நடித்திருக்கும் சித்தன் மோகன், செல்வன் முருகன் ஆகியோர் சின்னச் சின்ன டைமிங் காமெடிகள் மூலம் கலகலப்பைக் கூட்டி உள்ளனர். இவர்களின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பாட்டி வரும் காட்சிகள் எல்லாம் தன் நடிப்பால் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் இவரது எதார்த்த நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரும் திரையரங்குகளில் கைத்தட்டல் பெறுகிறார். மற்றொரு கிராம போலீசாக வரும் ஹலோ கந்தசாமியும் தன் பங்குக்குச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சின்னக் கதாபாத்திரமாகவே இருந்தாலும் படம் முழுவதும் பயணித்து சிறப்பான நடிப்பால் கலகலப்பைக் கூட்டி இருக்கிறார் ஸ்பை ராமர். இவரது கதாபாத்திரம் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி, முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கர்ண ராஜா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஹரிதா, பாரதி, முத்து பாண்டி ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

 

தீபன் சக்கரவர்த்தி இசையில் ஐயப்ப சாமி பாடல் கவனம் பெற்று இருக்கிறது. அந்தப் பாடலை எழுதிய வேல்முருகன் மிகச் சிறப்பாக எழுதி அவரும் கவனம் பெற்றுள்ளார். ஆர்வி சரண் ஒளிப்பதிவில் போலீஸ் நிலைய சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு ஒரு காவல் நிலையம், அதில் ஒரு பெண் போலீஸ், இரண்டு ஆண் போலீஸ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு பாட்டி, ஒரு இன்பார்மர், ஒரு நாயகன், நான்கு கைதிகள் என இவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரப் படத்தை மிக எதார்த்தமாகவும், சிறப்பாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் கொடுக்க முடியும் என்று நிரூபித்து, ஒரு கலகலப்பான படத்தைக் கொடுத்து கவனம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. குறிப்பாக, வெறும் திரைக்கதை மற்றும் வசனங்களை வைத்து ஒரு படத்தை கவனம் பெறச் செய்து ரசிகர்களை ஈர்க்க வைக்க முடியும் என்று சத்திய சோதனை படம் நிரூபித்து இருக்கிறது.

 

சத்திய சோதனை - சோதனை அல்ல சிறப்பு!

 

 

Next Story

"நம்முடைய படைப்பு காலம் கடந்தும் பேசப்பட வேண்டும்"  - சுரேஷ் சங்கையா 

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

Suresh Sangaiah Interview

 

ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுரேஷ் சங்கையா. இப்பொழுது சத்திய சோதனை திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார், இப்படம் திரையரங்க வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையாவைச் சந்தித்தோம், நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட விசயங்கள் பின்வருமாறு... 

 

முதல் படத்துக்குப் பிறகு ஆறு வருடங்கள் கேப் விழுந்தது வருத்தமாகத் தான் இருக்கிறது. அதற்கு நான் காரணமல்ல. கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு உடனடியாக அடுத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிகர்கள் தேர்வுக்கு நீண்ட காலம் எடுத்தது. அதனால் அந்தப் படம் செய்ய முடியவில்லை. அதிலே இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. இதற்கு நடுவில் எனக்குத் திருமணமும் நடந்தது. அதன் பிறகு நான் வாய்ப்பு கேட்கும்போது இரண்டு வருட கேப் ஏன் விழுந்தது என்கிற கேள்வி அனைவருக்கும் வந்தது. 

 

அதன் பிறகு ஒரு போலீஸ் கதையைத் தயார் செய்தேன். வித்தியாசமான முறையில் செய்யப்பட்டிருந்ததால் அது எப்படி வொர்க் அவுட் ஆகும் என்று கேட்டார்கள். படம் எடுப்பதற்கு முன்பு அது எப்படி வரும் என்று காட்டுவது கடினம். அதன் பிறகு தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இதிலும் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சுவார்த்தை பல காலம் நீடித்தது. அதன்பிறகு ஷூட்டிங் தொடங்கி மொத்த படமும் 19 நாட்களில் முடிக்கப்பட்டது. 

 

இந்தப் படத்தில் பிரேம்ஜி செய்திருக்கும் கதாபாத்திரத்தில் நீங்கள் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்தப் படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். அந்த கேரக்டருக்கு அவர்தான் சரியாக இருக்கிறார். முதல் படத்தில் வறண்ட நிலப்பரப்பைத் தேர்வு செய்தேன். இந்தப் படத்தில் பாதி மாதம் கடந்த பிறகு போலீசாருக்கு ஏற்படும் வறண்ட மனநிலையைக் காட்டும்படி காட்சிகள் இருக்கும். 

 

இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத போலீஸ் ஸ்டேஷன் இந்தப் படத்தில் இருக்கும். ஒவ்வொரு கேரக்டரும் நம் மனதுக்குள் இருப்பது தான். நாம் ஒரு வேலை செய்துகொண்டிருந்தாலும் மனதுக்குள் இன்னொரு விஷயத்தை யோசித்துக் கொண்டிருப்போம். அதை அப்படியே திரையில் காட்டும்போது இயல்பாக அமைந்துவிடுகிறது.

 

நிறைய கேப் விழுந்ததால் இரண்டாவது படமே எனக்கு முதல் படம் போல் தோற்றமளித்தது. எனக்கு கிடைத்த பட்ஜெட்டுக்குள் தான் நான் படம் எடுக்க முடியும். கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். நாம் உண்மையாக இருந்தால் வேலைகளும் சரியாக நடக்கும். 

 

லோகேஷ் கனகராஜ் என்னுடைய முதல் படத்தைப் பாராட்டி ஒரு நேர்காணலில் பேசினார். மீண்டும் மீண்டும் படத்தைப் பார்த்ததாக சொன்னார். அப்படி பாராட்டுவதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும். அவர் போன்ற பெரிய இடத்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பாராட்டுவது பெரிய விஷயம். அவருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

வாழ்வாதாரத்திற்காக வேலை பார்ப்பது ஒன்று. மனத்திருப்திக்காக வேலை பார்ப்பது இன்னொன்று. நான் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். பொருளாதார வலி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய படைப்பு காலம் கடந்தும் பேசப்பட வேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான எண்ணமாக இருக்கிறது. கிடாயின் கருணை மனு படத்தை இன்று அனைவரும் பாராட்டும்போது, நாம் சரியான வழியில் தான் செல்கிறோம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. மக்களோடு மக்களாக இணைந்து படம் செய்யும் மேஜிக் என்பது மிகச்சிலராலேயே செய்யப்படுகிறது. இவைதான் சாமானிய மக்களின் கதைகள்.