மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல் குடியிருப்பைச் சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் என்பவரின் மகளான ஜோதி துர்கா, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளார். இதனால், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு படித்துக் கொண்டிருந்தபோது, நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எப்போதும் தனது தோழியுடன் இரவு முழுவதிலும் படித்துக் கொண்டிருக்கும் சூழலில் நேற்று தோழி இல்லாத நிலையில் படித்துக் கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக அறையை தட்டியபோது திறக்காத நிலையில் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறந்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில். “அரியலூர் மாணவர் விக்னேஷ் மரணமடைந்த சில நாட்களுக்குள்ளாகவே, மதுரை மாணவி ஜோதி ஶ்ரீ துர்காவை நீட்தேர்வு படுகொலை செய்திருக்கிறது. நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாடால் தமிழக அரசு இன்னும் எத்தனை மாணவர்களைக் கொல்ல துணைபோக இருக்கிறது?” என்று பதிவிட்டுள்ளார்.