இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த 'தளபதி 65' பட நடிகை பூஜா ஹெக்டே, கரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் எனக்கு அனுப்பிய அனைத்து அன்பிற்கும் நன்றி. நான் நன்றாகக் குணமடைந்துவிட்டேன். முட்டாள் கரோனாவை உதைத்துத் துரத்திவிட்டேன். இறுதியாக சோதித்ததில் நெகட்டிவ் என வந்துவிட்டது. உங்கள் எல்லாப் பிரார்த்தனைகளும், குணப்படுத்தும் ஆற்றலும் அதன் மந்திரத்தைச் செய்ததாகத் தெரிகிறது. உங்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். பாதுகாப்பாக இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.