Skip to main content

விஜய், அஜித் படத்துக்கு நடந்த அதே சம்பவம் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கும் நடந்துள்ளது

 

ponniyin selvan 2 theatre glass accident while karthi visiting

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில் முதல் நாளான இன்று நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை ரசித்தனர். அப்போது கார்த்தி, சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள காசி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தார். கார்த்தியை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஒரு புறம் சூழ்ந்துகொண்டனர். மற்றொருபுறம் அவரை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். கூட்ட நெரிசல் அதிகமானதால் திரையரங்கை விட்டு வெளியில் வந்துகொண்டிருந்தார் கார்த்தி. அவரை சுற்றி இருந்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் அவரோடு வெளியில் வந்தனர். 

 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்ணாடி கதவு உடைந்து சிதறியது. இதில் பெரிதளவு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட வெளியீட்டின் போது, சென்னை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க முண்டியடித்ததால் கண்ணாடி கதவு சுக்கு நூறாக உடைந்தது குறிப்பிடத்தக்கது.