பிரதமர் மோடி நாளை (11.11.2022) தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார் பிரதமர் மோடி. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
கடந்த ஜுலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடியின் கையால் கௌரவ டாக்டர் பட்டம் பெறவுள்ளார். இளையராஜா இதற்கு முன்னதாக இரண்டு முறை கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.