Skip to main content

“கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வேன்” - பார்த்திபன் உறுதி

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
parthibhan interview in nakkheeran studio pokkisham

புதிய பாதை திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் தமிழ்சினிமாவில் தனக்கென புதிய பாதையை உருவாக்கியர் பார்த்திபன். இவரை நமது நக்கீரன் ஸ்டூடியோவின் பொக்கிஷம் நிகழ்ச்சிக்காக சந்தித்தோம். அப்போது அவரது திரை வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களையும் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகளையும் பகிர்ந்துள்ளார். 

அஜித் குமாரை வைத்து தற்போது இயக்க வாய்ப்பு இருக்கிறதா?  என்ற கேள்விக்கு, “இப்போது வாய்ப்பு கொடுக்கும் கண்டீசனில் அஜித்தும் வாய்ப்பு கேட்கிற கண்டீசனில் நானும் இருக்கிறேன். ‘நீ வருவாய் என’ படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடித்தது பிரமாதமான விஷயமாகத் தெரியவில்லை. அந்த படத்தின் போடோ ஷுட்டுக்கு நான் வரும்வரை அவர் காத்திருந்தார். அப்படிதான் நான் அவரை பார்த்தேன். இன்றைக்கு அவர் இமாலய லெவலுக்கு வளர்ந்து நிற்கிறார். நான் பொதுவாக யாரையும் ரீச் பண்ணுவதில்லை, அது மிகவும் கஷ்டமான ஒன்று. ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை நான் பிரமாதப்படுத்துவேன். தல படங்களிலேயே தலையாகிய படமாக இருக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வேன். தம்பி ராமையாவை வைத்தே நல்ல படம் பண்ணும்போது, தல அஜித் கிடைத்தால் எப்படி இருக்கும். அதற்கு அவருக்கு சரியான சூழல் வேண்டும். என்னுடைய அசிஸ்டண்ட்டாக இருந்த எச்.வினோத்துடன் அவர் படம் பண்ணும்போது சந்தோஷப்படுகிறேன். வாய்ப்பு கொடுக்கும் நிலைமையில்தான் அவரும் இருக்கிறார், என்றாவது அது நடந்தால் மகிழ்ச்சிதான்” என பதிலளித்தார்.   

மீண்டும் காமெடி ஜானரில் திரைப்படம் பண்ணுவிங்களா? என்ற கேள்விக்கு, “இரண்டு பாகங்களாக ஒரு கதை ரெடியாக இருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு மைத்திரி புரொடக்‌ஷனிடம் அந்த கதையை சொன்னேன். அவர்கள் சிரித்து ரசித்து கேட்டார்கள். அந்த படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். சூரி ஹீரோவாக ஆகாத நேரத்தில் அவரை  ஹீரோவாக வைத்து பண்ணலாம் என நினைத்தேன். ஆனால், இப்போது அவரை வைத்து பண்ண முடியாது. இப்போது அவர் ரூ.8 கோடி சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சூரியிடம் கேட்டேன். ஆனால் வேறு படங்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதனால் வடிவேலு மற்றும் சூரி இல்லாமல் மற்ற நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என்று இருக்கிறேன்” எனப் பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்