Skip to main content

“வெளியான முதல் நாள் கூட்டமே இல்லை...” - பார்த்திபன்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
parthiban spoke about his teenz movie

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், இந்தியன் 2 படத்தோடு கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

டீன்ஸ் படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு குறித்து பார்த்திபன் நெகிழ்ச்சியடைந்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உங்களின் அளவில்லாத ஆதரவிற்கு நன்றி. நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான், என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது. நேற்று டீன்ஸ் திரையரங்குகளில் அலைமோதிய அன்பு  கண்களை கடலாக்கியது. வெளியான முதல் நாள் கூட்டமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை. 

எத்தனை ஸ்கீரின்? எவ்வளவு கலெக்‌ஷன் ? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர். கோடிகளை(2) என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்து பார்த்திபன், ‘52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படமும், இரண்டு படங்களையும் இயக்கவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்