சினிமாவில் காலம் கடந்து நிற்பவர்கள் பட்டியலில் நடிகை சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு உதாரணமாக மார்க் ஆண்டனி படத்தில் அவர் பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு. அந்தளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், இளம் வயதிலேயே மறைந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது வாழ்க்கை கதையைத் தழுவி ஒரு படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற தலைப்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.