Skip to main content

குளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

தெற்காசிய குறும்படப் போட்டியுடன்,  மிக பிரமாண்டமாக மூன்றாம் ஆண்டில் “ஊட்டி திரைப்பட விழா” வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்திரைப்பட விழா குறித்து ஊட்டி திரைப்படச் சங்கத்தின் தலைவர் திரு.பாலநந்தகுமார், செயலாளர் பவா செல்லதுரை, திரைப்பட விழா இயக்குநர் திரு.மாதவன் ஆகியோர் கூறியதாவது...

 

ooty film fest

 

திரைப்பட ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இதமான பருவநிலையில், சுமார் 3 லட்சம் ரூபாய் அளவிலான பரிசுப்போட்டிகளுடன், இந்தியா, இலங்கை, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 90 குறும்படங்கள் இந்தாண்டு திரையிடத் தேர்வாகியுள்ளது. இவ்விழா நூற்றைம்பது ஆண்டு பழமையான ‘அசெம்ப்லி ரூம்ஸ்’என்ற திரையரங்கில் நடைபெறுவது பார்வையாளர்களின்  கவனத்தை  கூடுதலாக ஈர்க்கும்.  தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மிக எளிதாக  ஒன்றுகூட வசதியாக ஊட்டி உள்ளதால்,  இது தென்னிந்தியாவின் குறிப்பிடும்படியான ஒரு திரைப்பட விழாவாக வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.  

• தெற்கு ஆசிய துணைக்கண்டத்தில் தரமான குறும்படங்களை ஊக்குவித்தல் 
• குறும்பட கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் தயாரிப்பளர்களையும் இணைக்கும் மேடையினை உருவாக்குதல், கலந்துரையாடச் செய்தல் 
• இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச தரத்தில் குறும்படங்களை கண்டு ரசித்து அவற்றைப்பற்றிய விவாதத்தில் பங்குகொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்குதல்
• தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுதல்
• தமிழ குறும்பட துறையை மேலும் வலுப்பெற செய்தல்
போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்விழாவை ஒருங்கிணைத்து முன்னெடுப்பது ஊட்டி திரைப்படச் சங்கம். 

மூன்று நாட்களுக்குள், ஒவ்வொரு நாளும் 10 மணிநேர திரையிடல் நடக்கும். கூடவே மற்றொரு அரங்கில் ஒவ்வொரு காலை மாலை என 2 அமரவுகள் சிறப்பு திரைப்பட வல்லுநர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களுடன் கலந்துரையாடல் என விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அளவிலான சிறந்த குறும்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைப்பதோடு, அந்தந்த நாடுகளைச் சார்ந்த இளம் திரைப்பட ஆர்வளர்களைச் சந்தித்து உரையாடவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

 

assembly rooms

 

இந்தாண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர் திரு. ஜாய் மேத்யூ தலைமையிலான குழு பரிசுக்குறிய படங்களைப் பார்த்து தேர்வு செய்ய உள்ளது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், ரஞ்சித், சீனுராமசாமி, ஜீவா சங்கர் ’நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன், ’பரியேறும் பெருமாள்’பட இயக்குநர் மாரிசெல்வராஜ், ’96’ பட இயக்குநர் பிரேம்குமார், மேற்குத் தொடர்ச்சிமலை பட இயக்குநர் லெனின் பாரதி, எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான திரு.அஜயன்பாலா ஆகியோருடன் இன்றைய தமிழ் திரைப்பட உலகின் நம்பிக்கைகுறிய இளம்படைப்பாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

கடைசி நாளான டிசம்பர் 9-ம் தேதியில் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளைக் வழங்கி கௌரவிக்கவுள்ளார். திரைப்பட ரசிகர்கள் தங்கள் வருகையை www.ootyfilmfestival.org என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி திரைப்படச் சங்கத்தின் பொருளாளரும், அயல் சினிமா இதழாசிரியருமான திரு.வேடியப்பன் அவர்களை 9600156650 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உதகையில் தள்ளுமுள்ளு; எஸ்.பி. வாகனத்தை சேதப்படுத்திய அதிமுகவினர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் இருவரும் இன்று ஒரே நாளில் உதகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு  தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனிடையே எல்.முருகன் தாமதமாக வந்ததால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கில் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தாமதமாக வந்து எங்கள் நேரத்தில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்று அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து  பாஜக - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாஜவினர் பேரணி செல்வதால் சற்று நின்று செல்லுமாறு காவல்துறையினர் அதிமுகவினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதிமுகவினர் அதனைக் கேட்காமல் போலீசாரின் தடுப்புகளை மீறிச் சென்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை மறித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.