ntr 100 year ceremony  india president released a coin with ntr image

தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார். 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி. ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923 - 2023 என அச்சிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், மறைந்த என்.டி.ராமராவ் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தியுள்ளார். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்தார். அவர் நடித்த ராமர் மற்றும் கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் மிகவும் உயிரோட்டமாக இருந்தது.

என்.டி.ஆர் தனது நடிப்பின் மூலம் சாமானிய மக்களின் வலியையும் வெளிப்படுத்தினார். ‘மனுசுலந்த ஒக்காதே’ படத்தின் மூலம் சமூக நீதி, சமத்துவம் என்ற செய்தியை பரப்பியவர். அவர் பல மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கினார், அவை இன்றுவரை நினைவில் உள்ளன" என்றார். இந்த நிகழ்ச்சியில் என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா உட்பட என்.டி.ஆரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.