நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அந்த புகைப்படத்தில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், அவர் வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல் போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் நேற்று சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது நர்ஸ் கையில் ஊசி இருப்பது தெரிகிறது. இதன்மூலம் நயன்தாரா தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.