Skip to main content

“எல்லா காலத்திலும் இருக்கும் அரசியலைப் பேச வேண்டும்” - மிஷ்கின் 

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
mysskin about ramar temple openeing and his politivs view

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்தப் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் பிப்ரவரி 2ஆம் தெதி வெளியாகிறது. இதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மிஷ்கின், தற்போது விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கி வரும் டிரெயின் படம் குறித்து பேசுகையில், “25 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். விஜய் சேதுபதி மாதிரி ஒரு சிறந்த நடிகனை நான் பார்த்ததில்லை. அவ்ளோ அர்ப்பணிப்பு, நேர்மை. அது ஒவ்வொரு நாளும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. தாணு சார் ஒரு குழந்தையை எப்படி ஒரு அப்பா பார்ப்பாரோ அப்படி தான் பார்த்து கொள்கிறார். படம் அவ்ளோ அழகாக இருக்கிறது. நிறைய பேர் நடிக்கிறாங்க. நான் எழுதியதிலே ரொம்ப வேகமாக இருக்கும் படம் டிரெயின். அஞ்சாதே படத்தை விட வேகமாக இருக்கும் என நினைக்கிறேன். காத்திருங்கள். நிச்சயமா இப்படம் உங்களை சந்தோஷப் படுத்தும்” என்றார். 

ராமர் கோயில் திறப்பு குறித்த கேள்விக்கு, “ராமர், அல்லா, ஏசு, பௌத்தர், குருநானக் எல்லாருமே என் மனசுக்குள்ள இருக்காங்க. கோவிலுக்கும் சென்று கும்பிடலாம். ராமபிரான் ஒரு பெரிய அவதாரம். காவியத் தலைவன். அதில் நிறைய கருத்துகள் சொல்வாங்க. எனக்கு ரொம்ப அரசியல் கதையெல்லாம் தெரியாது. அது சம்மந்தமாக கருத்தும் சொல்லத் தெரியாது. ஆனால் எல்லாமே அழகு. எதிர்ப்பும் இருக்கட்டும். அதில் தப்பில்லை. ஒரு சினிமாக்காரனாக அரசியல் சார்ந்த கருத்துகளை சொல்லக் கூடாது என முடிவு பண்ணியிருக்கேன். ஆனால் சினிமாவை சார்ந்தவர்கள் அரசியல் கருத்து சொல்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து சுதந்திரம். 

என் அரசியல் நான் எடுக்கும் சினிமா தான் என நினைக்கிறேன். என் சினிமாவில் என் கதாபாத்திரங்கள், எல்லா காலத்திலும் இருக்கும் அரசியலை பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். மனித அவலம், பிற மனிதனை அவன் ஏன் நேசிக்கத் தவறுகிறான், ஒரு குடும்பத் தலைவனாக எப்படி வாழ வேண்டும், மற்றவர்களிடம் எப்படி அன்பைச் செலுத்த வேண்டும். இதைத் தான் என்னுடைய அரசியலாகப் பார்க்கிறேன். சமகால அரசியலைப் பற்றி நான் பேசக்கூடாதென நினைக்கிறேன். ஏனென்றால், அவரவர்களுக்கென்று ஒரு வேலை இருக்கிறது. என்னுடைய கடமை, நான் அரசியலை பற்றிப் பேசக்கூடிய இடம் ஓட்டு மட்டும் தான்” என பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்