Skip to main content

"இன்னமும் இப்படி உருக்குறாரே..." - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

இளையராஜா... நாற்பது ஆண்டுகள் கடந்தும் இந்த நாத தேவனின் இசையில் மூழ்கி மகிழ்கிறது தமிழகம். காதலை சொல்லவும் ராஜா பாடல், காதல் தோல்வியின் சோகத்தை கொண்டாடவும் ராஜா பாடல் என மூன்று தலைமுறைகள் கொண்டாடிய இசைஞானி இளையராஜா, 2010க்குப் பிறகு திரைப்படங்களுக்கு இசையமைப்பது குறைந்தாலும் நிற்கவில்லை. ஆனால் 80களிலும் 90களிலும் இவர் இசையமைத்த பாடல்களே நமக்குக் காலம் முழுவதும் கேட்டு ரசிக்கப் போதுமானவை. அந்தப் பாடல்களின் ரசிகர்கள்தான் இணையத்திலும் இளையராஜாவை கொண்டாடி வருகின்றனர். 'ராஜா சார்' என்ற வார்த்தை இவர்களின் வேதமாக இருக்கிறது.

 

udhayanidhi stalin psycho



மற்றொரு புறம், இளையராஜாவின் மேடைப்பேச்சுகளும் செய்தியாளர் சந்திப்புகளும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இளையராஜாவின் கோபம் புகழ் பெற்றதாகிவிட்டது. தனது இசை நிகழ்ச்சிகளில் அவர் அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இந்தக் குறைகள் மீம்ஸ்களாகவும், ட்ரோல்களாகவும், சீரியஸான முறையிலும் விமர்சிக்கப்பட்டாலும் இவை எதுவும் இளையராஜாவின் இசை கொண்டாடப்படுவதை தடுக்கவில்லை. எப்படி ரஜினிகாந்த், ஒரு பக்கம் 'தலைவர்' எனவும் 'சூப்பர் ஸ்டார்' எனவும் தனது சினிமாக்களுக்காகக் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காகக் விமர்சிக்கப்பட்டும் வருகிறாரோ அவ்வாறு இளையராஜா இரு விதமாக சமூக ஊடகங்களில் இருக்கிறார். 'தென்றல் வந்து தீண்டும் போது', 'புன்னகை மன்னன் நடன இசை' உள்ளிட்ட பல படைப்புகள் 2K கிட்ஸ் வரை சென்று சேர்ந்திருக்கின்றன.


தற்போதைய காலகட்டத்தில் உள்ள பல இயக்குனர்களும் இளையராஜாவை கொண்டாடி வருகின்றனர். கௌதம் மேனன், மிஷ்கின், லெனின் பாரதி போன்ற சில இயக்குனர்கள் அவருடன் பணியாற்றியும் வருகின்றனர். மிஷ்கின், எப்பொழுதும் ஒரு படி மேலே சென்று டைட்டிலில் இளையராஜாவின் பெயரை இயக்குனரான தனது பெயரை விட அதிக முக்கியத்துவம் கொடுத்தே போடுவார். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துத் தயாராகியுள்ள 'சைக்கோ' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அப்படத்தின் 'உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா' என்ற பாடல் 18 நவம்பர் அன்று யூ-ட்யூபில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்தப் பாடல் கேட்பவர்களை உருக வைக்கும் காதல் பாடலாக அமைந்துள்ளது. பார்வையற்ற ஒருவனின் காதல் உணர்வை அழுத்தமாக எழுதியுள்ளார் பாடலாசிரியர் கபிலன். சித் ஸ்ரீராம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் பாடல் இளையராஜாவின் ரசிகர்களுக்கு விருந்தாகவும் "இன்னமும் இப்படி உருக்குறாரே" என்று இன்றைய இளைஞர்களால் வரவேற்கப்பட்ட ஒன்றாகவும் அமைந்துள்ளது.                          

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.