Skip to main content

“தலைவா வேற லெவல்..!” மாஸ்டர் படத்தைக் காண கடல்தாண்டி வந்த ரசிகை...!

Published on 03/02/2021 | Edited on 05/02/2021

 

malaysia girl who came to chennai for master film

 

கரோனா பெருந்தொற்றால் கடந்த வருடம் முழுவதும் முழு அடைப்பு விதிக்கப்பட்டு சர்வதேச எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாய் மாறியது. 
 

தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவருவதால், இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. அதேநேரம் அண்டை நாடுகளில் இன்னும் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்படாததால் தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை திறக்கப்படாமல் உள்ளது. 
 

சில வாரங்களுக்குமுன் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. கரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தீவிர விஜய் ரசிகையான மலேசியாவாழ் தமிழ்ப் பெண் ஒருவர், எப்படியாவது விஜய்யின் மாஸ்டர் படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 


எப்படியும் படம் பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்த விஜய் ரசிகை ஆஷ்லினா, மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். மேலும் சென்னை சத்யம் வளாகத்தில் உள்ள ஒரு தியேட்டரின் இருக்கைகளை முழுதாக புக் செய்து தனது நண்பர்கள், உறவினர்களுடன் மாஸ்டர் படம் பார்த்துள்ளார். 


இதுபற்றி ஆஷ்லினா கூறுகையில், “சிறு வயது முதலே நான் விஜய்யின் தீவிர ரசிகர். எப்போதும் விஜய் படங்கள் வெளியானதும் முதல் நாளே பார்த்துவிடுவேன். மாஸ்டர் படத்தையும் அப்படி முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், மலேசியாவில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் மாஸ்டர் படத்தைப் பார்க்க முடியாமல் போனது. அதனால் விமானம் மூலம் சென்னை வந்து சத்யம் தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்து ரசித்தேன்” என்று தெரிவித்தார். 
 


மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “15 மாதங்கள் கழித்து தளபதியை வெள்ளித் திரையில் பார்க்கிறேன். தலைவா வேற லெவல்..” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

பரபரப்பு புகார்; மலேசியாவில் விற்கப்பட்ட தமிழக பெண்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Tamil Nadu girl was taken to Malaysia and sold for 1.26 lakh

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடர்ஹள்ளியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேந்திரன்(34).  கூலித்தொழிலாளி. இவர், பிப்., 19ஆம் தேதி, சேலம் சரக காவல்துறை டிஐஜி உமாவிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது: என்னுடைய அக்கா, மகேஸ்வரி (40). கணவரால் கைவிடப்பட்ட அவர், என்னுடைய வீட்டில் வசித்து வந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்பவர், என்னுடைய அக்காவிடம் மலேசியாவில் அதிக சம்பளத்தில் வேலை இருக்கிறது. அங்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறேன்  என்றார். அதன்பேரில், கடந்த மாதம் 4ஆம் தேதி, என்னையும், அக்காவையும் முகமது அலி சென்னைக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் முத்து என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் இருவரும் எங்களை சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மலேசியாவுக்கு என்னுடைய அக்காவை விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு, மகேஸ்வரி என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னை, முகமது  அலியும், முத்துவும் சேர்ந்து மலேசியாவில் உள்ள அருள் என்பவரிடம் 7 ஆயிரம் ரிங்கிட்டுக்கு (இந்திய மதிப்பில் 1.26 லட்சம் ரூபாய்) விற்று விட்டனர். அருள் என்னை ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார். 9 பேர் கொண்ட அந்த குடும்பத்தினர் என்னை துன்புறுத்துகின்றனர். இனியும் என்னால் இங்கு இருக்க முடியாது. டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று ஆசை வார்த்தை கூறி, சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஏமாற்றி விட்டனர் என்று கூறி கதறி அழுதார்.     

இது தொடர்பாக அருள் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, 7 ஆயிரம் ரிங்கிட் பணத்தைக் கொடுத்தால்தான் மகேஸ்வரியை விடுவிக்க முடியும் என்று கூறினார். என்னுடைய அக்காவை மலேசியாவுக்கு தந்திரமாக அழைத்துச் சென்று விற்பனை செய்த முகமது அலி,  முத்து, அவரை விலைக்கு வாங்கிய  அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மகேஸ்வரியை பத்திரமாக மீட்டுக் கொடுக்க வேண்டும்.  இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.     

இந்தப் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரைக்கு, டிஐஜி உத்தரவிட்டார். அதன்பேரில்  மத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.