கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல், வாரிசு அரசியல்தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து பல பிரபலங்களை அழைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுஷாந்தின் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரோபாரதி உள்ளிட்ட ஆறு பேர் மீது சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகாரளித்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த எஃப்.ஐ.ஆரில், ரியா சக்ரோபாரதி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பீகாரின் துணை முதல்வர் சுசில் மோடி, மகாராஷ்டிரா காவல்துறை சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, “இந்த வழக்கு விசாரணையில் மகாராஷ்டிரா காவல்துறை, பீகார் காவல்துறையுடன் ஒத்துழைக்கவேண்டும். ஏனென்றால் பீகாரிலுள்ள பாட்னா காவல்நிலையத்தில்தான் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இரு மாநில காவல்துறைக்கும் இடையே எந்த மோதலும், கருத்து வேறுபாடும் இல்லை. சுஷாந்தின் தந்தை விரும்பினால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி, வழக்கை விசாரிக்க மும்பை வந்தார். ஆனால், மும்பை வந்த அவரை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயமாக தனிமைப்படுத்தினர். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு அடையாளமாக கையில் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.