Skip to main content

"அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தா வேற யாருனாலும் அழுதுருப்பாங்க..." - கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரசிய சம்பவம்     

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

சமீபத்தில் மறைந்த பிரபல நாடக ஆசிரியர், வசனகர்த்தா கிரேசி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சினிமா நாடகத்துறையை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு கிரேசி மோகனுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதன் ஒரு பகுதி...


"கிரேசி மோகன் மிக ஜாலியானவர், இயல்பானவர். எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பழக்கம் அவர். படங்களென்று பார்த்தால் ஐந்தோ, ஆறோதான் ஒன்றாக பண்ணியிருப்போம். ஆனா, நெருக்கமான நட்பு. கமல் சார், மக்கள் நீதி மய்யம் தொடங்கியதிலிருந்து நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ரொம்ப நாள் கழிச்சு, கிரேசி மோகன் சார் மரண செய்தி வந்ததும் எனக்கு கால் பண்ணார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினோம். முன்னாடி நான், கமல் சார் செட்ல இருந்தோமென்றால் தினமும் ஒரு முறையாவது பாலச்சந்தர் சார், நாகேஷ் சார் பற்றி பேசுவோம். இப்போ அந்த வரிசையில் சேர்ந்துட்டாரே கிரேசி மோகன் என்று கமல் சார் வருத்தப்பட்டார்.

 

 

kamalhassan with crazy mohan



அவ்வை சண்முகி படத்திற்கு முக்கிய காரணமே கிரேசி மோகன்தான். கதை, வசனம் எழுதினார் என்பதற்காக சொல்லவில்லை. முதலில் 'கண்டேன் சீதையை' அப்படின்னு ஒரு படம்தான் ஒரு மலையாள இயக்குனரை வைத்து அவர்கள் தொடங்கியிருந்தனர். ஆனால், அது சரியா வரலைன்னு பிறகு என்னை அழைத்து நாங்க ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினோம். திடீரென ஒரு நாள் கிரேசி மோகன் வந்து, "சார், நாம வேற ஒரு படம் பண்ணலாமா?"னு கேட்டார். "ஏன் சார், கதை நல்லாதானே வருது. ஸ்க்ரிப்ட் ரெடியாயிருச்சு, மந்திரி குமாரன்னு டைட்டிலெல்லாம் வேற யோசிச்சுட்டோம்" என்று நான் கேட்டேன். "அதில்ல சார்... நேத்து வெளியில நின்னு பேசிக்கிட்ருந்தோம்ல... ஒரு கார் மேல சாஞ்சுருந்தோம். ஸ்க்ரிப்டை கார் மேல வச்சிருந்தேன். நான் வெத்தல பாக்கு போட்டேன். கார் கெளம்பி போயிருச்சு, நானும் வீட்டுக்குப் போயிட்டேன்" என்றார். "என்ன சார் சொல்றீங்க?" என்று நான் அதிர்ச்சியாகக் கேட்டு, "சரி, திரும்ப அதே ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணலாம்" என்று சொல்ல, "இல்ல சார்... அது வேணாம். அதை யார் பார்த்தாலும் ஒரு சின்ன படமா கூட எடுத்துருவாங்க. நமக்கு அது வேணாம். புதுசா பண்ணலாம்" என்று சொல்லி ரெடி பண்ணதுதான் அவ்வை சண்முகி கதை.


இப்படி எல்லாத்தையும் பாசிட்டிவ்வாதான் பேசுவார். திட்டும்போது கூட நெகட்டிவ்வா பேச மாட்டார். இப்படி ஒரு சமபவம் வேற யாருக்கு நடந்துருந்தாலும் உக்காந்து அழுதுருப்பாங்க. ஆனா அவர் ஒரு நிமிஷம் கூட வருத்தப்படல. அப்படி ஒரு மனுஷன பாக்கவே முடியாது. ஒரு நாள் வந்தார். "ரஜினி சார்க்கு ஒரு கதை இருக்கு சார். இங்கிலிஷ்ல 'கோஸ்ட் டேட்'னு (ghost dad) ஒரு படம் இருக்கு. பாக்கலாமா?"னு கேட்டார். நான் "கோஸ்ட்... கீஸ்ட் எல்லாம் வேணாம் சார். ரஜினி சார் ஃபேன்ஸ் வேற"னு சொல்ல, அவர், "ஏன்... நீங்க படையப்பா பண்ணீங்க, பேய் அப்பா எடுக்க மாட்டிங்களா?"னு கேட்டார். இவ்வளவு ஸ்பான்டேனியஸா பேச வேற யாராலயும் முடியாது."                                   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.