Skip to main content

'ரகு தாத்தா' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

keerthy suresh next with hombale films

 

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் கடைசியாக மலையாள படமான 'வாஷி' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் மாரி செல்வராஜ், உதயநிதி கூட்டணியில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி, தற்போது ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தில் நடிக்கிறார். இதனிடையே தெலுங்கில் நானியின் 'தசரா', மற்றும் சிரஞ்சீவியின் 'போலா சங்கர்' படங்களில் நடிக்கிறார். இதில் 'போலா சங்கர்' படம் அஜித்தின் 'வேதாளம்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் படத்திற்கு 'ரகு தாத்தா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களைத் தயாரித்து வந்த  ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறது. 'பேமிலி மேன்' வெப் சீரிஸில் எழுத்தாளராக பணியாற்றிய சுமன் குமார் இப்படத்தை இயக்குகிறார். 

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசைப் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தைரியமிக்க ஒரு பெண், தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து ஒரு குடும்ப படமாக உருவாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 

 

முன்னதாக தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கும் சுதா கொங்கரா இயக்கத்தில் இரண்டு படங்கள் தயாரிப்பதாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படங்கள் உருவாகும் எனத் தெரிவித்த நிலையில், பின்பு எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சார்மிங்கிலிருந்து சால்ட் அண்ட் பெப்பர்’ - ஜெயம் ரவிக்கு வெளிச்சம் தந்ததா? - ‘சைரன்’ விமர்சனம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
jayam ravi siren tamil movie review

எப்பொழுதும் சார்மிங்கான ஹீரோவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, இந்த முறை சால்ட் அன் பெப்பர் லுக்கில் வயதான கதாபாத்திரத்தில் களம் இறங்கியிருக்கும் படம் சைரன். கெட்டப் மாற்றி தன் தோற்றத்தை புதியதாகக் காட்டி இருக்கும் ஜெயம் ரவி, இந்த படத்தையும் அதேபோல் புதியதாகக் காட்டியிருக்கிறார்களா? இல்லையா?

செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலிலேயே இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயம் ரவி, பரோலில் தன் 12 வயது மகளைப் பார்க்க வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த நேரத்தில் யார் யார் மூலம், குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு சென்றாரோ அவர்கள் எல்லாம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சந்தேக பார்வை ஜெயம் ரவி மீது திரும்புகிறது. எப்பொழுதும் ஷாடோ போலீஸுடன் இருக்கும் ஜெயம் ரவி இந்த கொலைகளை செய்தாரா, இல்லையா? ஜெயம் ரவி ஜெயிலுக்குப் போகும் காரணம் என்ன? குற்றம் செய்தவர்களை யார் கொலை செய்தது? என்பதே சைரன் படத்தின் மீதிக் கதை.

jayam ravi siren tamil movie review

ஜெயம் ரவியை வைத்துக்கொண்டு பில்டப்புகள் இல்லாமல் நேராக கதைக்குள் சென்றுவிட்டு அதன்பின் ஸ்டேஜிங்கில் சற்று நேரம் எடுத்துக்கொண்டு போகப் போக ஆக்சிலேட்டர் கொடுத்து படத்தை மித வேகமாக நகர்த்தி கடைசியில் அழுத்தமான காட்சிகளோடு படத்தை முடித்து ஒரு நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி. கதையிலும் தன் எழுத்திலும் மிக ஆழமான கருத்துக்களைப் படம் மூலமாக தெளித்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூட வேகத்தைக் கூட்டி இருக்கலாம். ஆங்காங்கே கதைகளை விட்டு வெளியே செல்லாதபடி இருக்கும் வசனங்கள் அதே சமயம் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களையும் உள்ளடக்கி படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. தேவையில்லாத மாஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் எனக் கண்களை உறுத்தும் அளவிற்கு எதையும் பெரிதாக வைக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை மட்டும் படத்தில் கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி.

முந்தைய படங்களைக் காட்டிலும் தன் அனுபவ நடிப்பின் மூலம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி. சின்ன சின்ன முக பாவனைகள் அசைவுகள் என அந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். எப்பொழுதும் கலகலப்பாக நடிக்கும் ஜெயம் ரவி இந்த படத்தில் சற்றே அடக்கி வாசித்து அதிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வாய் பேச முடியாத அதே சமயம் காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இன்னொரு நாயகி கீர்த்தி சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார். தேவையில்லாத எமோஷ்னல்களை முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தாமல் ஒரிஜினல் போலீஸ் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படியெல்லாம் எதார்த்தமாக நடந்து கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு வலுக்கூட்டி இருக்கிறார். இவரின் மிடுக்கான தோற்றமும் துடிப்பான வசன உச்சரிப்பும் அந்த கதாபாத்திரத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.

jayam ravi siren tamil movie review

அரசியல்வாதியாக வரும் அழகம் பெருமாள் தன் அனுபவ நடிப்பு மூலம் கவனம் பெற்றிருக்கிறார். ஜாதி வெறி பிடித்த போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக நியாயம் செய்திருக்கிறார். எரிச்சல் தரும்படியான இவரின் நடிப்பு கைத்தட்டல் பெற்றிருக்கிறது. நகைச்சுவைக்கு பொறுப்பேற்ற யோகி பாபுவின், ஒரே மாதிரியான நடிப்பும் வசன உச்சரிப்பும் இன்னும் எத்தனை படங்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் மட்டும் மெல்லிய புன்னகைகளை வர வைத்து விடுகிறார். வில்லனாக மிரட்ட முயற்சி செய்திருக்கிறார் வில்லன் நடிகர் அஜய். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ஜெயம் ரவியின் மகளாக நடித்திருக்கும் நடிகை சிறப்பு.

எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவில் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக கையாண்டு படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். சாம் சி.எஸ் பின்னணி இசை வழக்கம் போல் காதை கிழித்து விடுகிறது. மொத்தமாக இப்படத்தை பார்க்கும் பொழுது, முதல் பாதி மெதுவாக நகர்ந்து ஒரு கொலைக்குப் பின் வேகம் எடுத்து அதன் பின் கிரிப்பிங்கான திரைக்கதை மூலம் நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை சைரன் கொடுக்கத் தவறவில்லை.

சைரன் - சத்தம் அதிகம்; வெளிச்சம் குறைவு!

Next Story

“வாழ்க்கையில ரெண்டு தேவதைங்க கிடைப்பாங்க” - கைதியாக ஜெயம் ரவி

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
jayam ravi siren movie trailer release

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இதில் சைரன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என முன்பு தகவல் வெளியானது. பின்பு திரையரங்குகளில் வெளியாவதை படக்குழு உறுதி செய்தது. இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டீசரை பார்க்கையில் பரோலில் வெளிவந்த ஒரு கைதியை பற்றி சொல்வது போல் அமைந்திருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், நடித்திருக்க, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஜெயம் ரவி, ஒரு சம்பவத்தால் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு போகிறார். அவர் எதற்காக போகிறார், விடுதலை ஆனாரா? இதற்கு பின்னால் நடந்தது என்பதை ஆக்‌ஷன், எமோஷன், காதல் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. ட்ரைலரில் ஜெயம் ரவி பேசும், “எல்லா ஆம்பலைங்களுக்கும் ரெண்டு தேவதைங்க கிடைப்பாங்க. ஒன்னு நமக்காகவே பொறந்த தேவதை, இன்னொன்னு நமக்கே பொறந்த தேவதை, அவுங்க ரெண்டு பேருக்கு ஏதாவது ஒன்னுன்னா, நம்மளால தாங்கிக்கவே முடியாது...” என்ற வசனம் கவனம் பெறுகிறது. மேலும் யூடியூப்பில் இப்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி, ட்ரன்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.