Skip to main content

நடிகர் அருண்பாண்டியன் உடல்நிலை குறித்து மகள் பதிவு!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Arun Pandian

 

நடிகர் அருண்பாண்டியன் கரோனா தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும், அதனைத் தொடர்ந்து, அவர் செய்து கொண்ட ஆஞ்சியோ சிகிச்சை குறித்தும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனா இரண்டாவது அலையைச் சுற்றியிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஒருநாள் இரவு அப்பா லேசான நெஞ்சு வலி இருப்பதாகவும் தூங்க முடியவில்லை என்றும் சொன்னார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்றார். மறுநாள் அப்பாவுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. திருநெல்வேலியில் வீட்டுத்தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் 7 நாட்களும்  மருத்துவ உதவி அங்கேயே கிடைக்கும்படி ஏற்பாடு செய்தோம். அந்த 15 நாட்கள் எங்களை அதிகம் பயமுறுத்தின. ஏனென்றால் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்குக் கரோனா தொற்று தீவிரமாகப் பரவவில்லை என்று நினைக்கிறேன்.

 

நெஞ்சு வலி பிரச்சனையைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று அப்பா உறுதியாக இருந்தார். கரோனா தொற்று நீங்குவதற்காகக் காத்திருந்தார். தொற்று இல்லை என்று தெரிந்து 7 நாட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு முழு இதய பரிசோதனை செய்து கொள்ள அப்பா சென்றார். ஆஞ்ஜியோகிராம் சோதனையில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும், அதில் இரண்டு அடைப்புகள் 90 சதவிதம் தீவிரமடைந்ததால் உடனடி சிகிச்சை தேவை என்பதும் தெரியவந்தது. 

 

அவசரத்தின் அடிப்படையில் அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கரோனாவிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்தாலும் அப்பா சிகிச்சை செய்துகொள்ளத் தயாராக, வலிமையுடன் இருந்தார். 2.5 மணி நேர சிகிச்சை முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

 

இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். கடந்த மாதம் எங்கள் குடும்பத்துக்கு கடினமாக இருந்தது. ஆனால் நேர்மறையாக இருந்ததே எங்களை தொடர்ந்து செலுத்தியது. குறிப்பாக அப்பா மனரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது.

 

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். அறிகுறிகள் தென்படும்போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்