![Katrina Kaif and Vicky Kaushal Get Death Threat Man Arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/HJzTdsmK5PV-7pDLNfhR2dOD7RuyqESw-FFB3ICuX8A/1658753431/sites/default/files/inline-images/1341.jpg)
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிகர் விக்கி கௌசலும் காதலித்தது வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து மும்பையில் ஒன்றாக வாழ்ந்து வரும் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசல் ஆகிய இருவருக்கும் அண்மையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசல் ஆகிய இருவரும் மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/7lVw3NsvE3yDRSGxNOPaNc0g7bOUU54SJAHkotYyb4g/1658753656/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_2.jpg)
இந்நிலையில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசல் ஆகிய இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மன்விந்தர் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதனை தொடர்நது நடைபெற்ற விசாரணையில் மன்விந்தர் சிங் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் என்றும், அவர் கத்ரீனா கைஃப்பின் தீவிர ரசிகர் என்றும் தெரிய வந்தது. மேலும் மன்விந்தர் சிங் கத்ரீனா கைஃப்பை திருமணம் செய்ய ஆசைப்பட்டதால், அவரை சமூக வலைதளத்தின் மூலம் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்தது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறை மன்விந்தர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.