Skip to main content

“இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?” -கார்த்தி கேள்வி

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020' வரைவு குறித்த விழிப்புணர்வை பலரும் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

 

"நாடென்ப நாடா வளத்தன நடல்ல
நாட வளந்தரு நாடு”

-குறள் 739

 

"முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல"

 

மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில், இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள், நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால், தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020' வரைவு (Environmental Impact Assessment - EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

 

மலைகளும், ஆறுகளும் பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவது, இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

 

இந்த வரைவு அறிக்கையில், ‘பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?

 

மேலும் தொழிற்சாலைகள் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை (Post Facts) மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களைக் குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

 

நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கோவிட் - 19 எனும் அரக்க பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வருங்கால சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

 

எனவே, இந்த வரைவு அறிக்கையின் சாதக, பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். eia2020-moefcc@gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியில், ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துகளைப் பதிவு செய்வோம்.

 

அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடித்த பின், விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் கார்த்தி. 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.  

Next Story

கார்த்தியின் அடுத்த படக்குழு வெளியிட்ட அப்டேட்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
karthi 26 movie update

கார்த்தி தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

இதனிடையே, நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பூஜையில் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக்கும் கலந்து கொண்டுள்ளார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.