Skip to main content

“உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில் தான் இருந்திருக்கிறார்”- தயாரிப்பாளர் தாணு!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
kalaipuli s thanu

 

 

அண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இது தமிழ் திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. தற்போது இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் நேற்று காலை ஒன்று கூடி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் பேசிய தாணு, “பல்வேறு சாதனை படைத்த தயாரிப்பாளர்கள் அனைவருமே 1,300 பேர் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் தற்போதைய காலத்தில் 50 - 100 பேர் வரைதான் படம் தயாரிப்பார்கள். மீதி அனைவருமே வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு, முன்பு படம் பண்ணினோம் இன்றைக்கு நாம் இந்த சூழலில் இருக்கிறோம். இந்த சங்கம் நமக்கு கொடையாக இருக்காதா என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அவர்களுக்கு இன்சூரன்ஸ் போட்டுக் கொடுத்து, அதன் மூலம் சுமார் 900 உறுப்பினர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். மாதம் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை சுமார் 200 பேருக்கு உதவியாக போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அனைவருக்கும் 5000 ரூபாய் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறோம். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தாய்வீட்டு சீதனம் என்று சந்தோஷப்படுகிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா இந்த மாதிரி தவறை சத்தியமாக செய்யவில்லை. ஏனென்றால் அவர் மனம்விட்டு என்னிடம் பேசியிருக்கிறார். ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு பாரதிராஜாவை சூழ்நிலை கைதி மாதிரி ஆக்கிவிட்டார்கள். உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில்தான் இருந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். பல பேர் பல விதமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

நான் அவரிடம் பேசும் போது, அனைவரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித்தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துவிட்டது. இந்தவொரு பதட்டத்தில் தான் இருக்கிறோம்.

 

இந்தச் சங்கத்தில் தலைவராக இருக்கும்போது நல்லபடியாக நிர்வாகம் செய்துவிட்டு தான் வந்தேன். வரும் தலைமுறையினருக்கு வழிவிட்டுத்தான் சென்றேன். இப்பவும் சொல்றேன், இந்த சங்கத்தில் இந்தாண்டும் நான் தலைவராக நிற்க போகிறேன் என அறிவிக்கவில்லை. ஆனால், பாரதிராஜா வந்தார் என்றால் அவருடைய பதவிக்கு மட்டும் தேர்தல் வேண்டாம். மற்ற பொறுப்புகளுக்கு தேர்தல் வைத்து கொள்வோம் என்று தான் சொன்னேன்.

 

பாரதிராஜா என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ இந்த சங்கத்துக்கு செய்யட்டும். இதில் எந்தவொரு குறைபாடுமே கிடையாது. அவருடைய காலம் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடந்த 9 மாதங்களில் அவர் இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னென்ன குழப்பம் எல்லாம் நடந்தது என்பது இங்குள்ள பைல்களை எடுத்து பார்த்தால் தெரியும். அப்படிப்பட்டவர்கள் இப்போது பாரதிராஜாவுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

 

தமிழுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ, அந்தளவுக்கு திரையுலகில் பாரதிராஜாவுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்கள். எந்த காலத்திலும் அவரை கீழே இறக்கி பார்க்கவே மாட்டோம். உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். யோசனை செய்யுங்கள். தயவு செய்து எந்த பிளவும் வேண்டாம்.

 

இந்த பிரச்சனையில் பாரதிராஜாவின் பெயரையே பயன்படுத்த வேண்டாம், அவர் ஒரு புனிதம். இந்த திரையுலகிற்கு ஒரு செழுமையான சூழலை உண்டாக்கி கொடுத்த ஒரு மகான். அனைவருக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில், இந்த தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“க்ளைமாக்ஸ் மிரட்டல்” - ஜி.வி பிரகாஷ் படத்திற்கு திரை பிரபலங்கள் பாராட்டு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
producer thanu praised gv prakash kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய் நுழைந்துவந்த அனுபவம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பாராதிராஜ மற்றும் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

producer thanu praised gv prakash kalvan movie

இந்த நிலையில் ரஜினி, கமல்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்வன், உள்ளம் கவர் கள்வன், பாரதிராஜாவும் , இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள், க்ளைமாக்ஸ் மிரட்டல், வெற்றி பெற வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.  
 

Next Story

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ - ஆளவந்தான் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Aalavandhaan re release update

 

கமல்ஹாசன் கதை, மற்றும் திரைக்கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

 

இப்படம் 22 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.