Skip to main content

"யாரோ ஒருத்தருக்கு நான் வில்லனாக நடிக்கணுமா?" - ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த அன்றைய பிரபல நடிகர்!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பைரவி படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

பைரவி படத்தின் மூலமாக நடிகர் ரஜினியை நான்தான் கதாநாயகனாக அறிமுகம் செய்தேன். அந்தப் படத்தை எடுத்து முடிக்க நான் பட்டபாடு கடவுளுக்குத்தான் தெரியும். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. சாண்டோ சின்னப்பத்தேவர்தான், நீ புள்ளகுட்டிகாரன்... படம் எடுத்து சம்பாதிடா... நான் மூன்று லட்சம் தாரேன் என்றார். அந்த ஆசையில்தான் பைரவி படத்தை தொடங்கினேன். அந்த காலகட்டத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை, கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால், தேவருக்கு அதில் விருப்பமில்லை. ரஜினியை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று அவர் யோசனை கூற, நான் வாக்கு கொடுத்துவிட்டதால் மாற்ற இயலாது என்றேன். அதற்கு தேவர், நீ வாக்கு கொடுப்பப்பா... நான் பணம் கொடுக்குறேன்ல என்றார். வாக்கு கொடுத்துவிட்டு அதற்கு மாறாக நடக்க எனக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்ணே... நானே படம் எடுத்துக்கிறேன் எனக் கூறிவிட்டு நான் கிளம்பிவந்துவிட்டேன்.

 

ரஜினியிடம் நான் கதை கூறியபோது, கதையை கேட்டுவிட்டு கதை நல்லா இருக்கு... யாருக்கு இந்தக் கதை என்றார் ரஜினி. நீங்கதான் என நான் கூற, நானா என ஒருவித தயக்கத்துடன் ரஜினி கேட்டார். ரஜினியின் தயக்கத்தைக் கண்டு, இவர் நடிப்பாரா என எனக்கு சந்தேகமாக இருந்தது. சமீபத்தில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழாவில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார். நான் வில்லன் கதாபாத்திரத்திற்காக கதை கூற வந்திருக்கிறேன் என்று ரஜினி நினைத்துள்ளார். நீங்கள்தான் ஹீரோ என்றவுடன் அவருக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் கதாநாயகனாக நடித்தால் உள்ள பொழப்பும் போய்விடும் என அவருக்கு நெருக்கமானவர்களுடன் ரஜினி கூறியுள்ளார். நான் அப்போது 15 ஆயிரம் சம்பளம் பேசியிருந்தேன். இந்த வாய்ப்பை நிராகரிப்பதற்காக 50 ஆயிரம் சம்பளம் கேட்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். அதன்படி, 50ஆயிரம் சம்பளம் என்றால் இவரால் கொடுக்க முடியாது. அதனால் வேறு நடிகரைத் தேடி போய்விடுவார் என்று நினைத்து, என்னிடம் 50 ஆயிரம் சம்பளம் கேட்டனர்.

 

50 ஆயிரம்தான வேணும்... இதோ வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்து, கழுத்தில் இருந்த நகை, வீட்டில் இருந்த நகை அனைத்தையும் விற்று ரஜினிக்கு 30 ஆயிரம் கொடுத்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் மீதி பணத்தை தந்துவிடுகிறேன் எனக் கூறினேன். மொத்தமாக 30 ஆயிரம் ரூபாயை பார்த்தது அதுதான் ரஜினிக்கு முதல்முறை என்று என்னுடைய 90ஆவது பிறந்தநாள் விழாவில் ரஜினி கூறினார். நான் தாலியை விற்று பணம் கொடுத்த விஷயத்தை நடிகர் சிவகுமார் மேடையில் போட்டு உடைத்துவிட்டார். சிவகுமார் இப்போது சொல்லித்தான் அந்த விஷயமே தனக்கு தெரியும் என்றும் ரஜினி கூறினார்.  

 

ஹீரோவாக நடிக்க ரஜினிக்கு பணம் கொடுத்துவிட்டேன். அடுத்து யாரை வில்லனாக நடிக்க வைக்க என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி என்றால் அவர்களுக்கு வில்லனாக நடிக்க நம்பியார், பாலையா, வீரப்பா எனப் பல ஆட்கள் இருக்கிறார்கள். ரஜினிக்கு வில்லன் என்றால் யார் நடிக்க வருவார்? அப்போதுதான் ஏன் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்கவேண்டாம் என தேவர் கூறினார் என்பது புரிந்தது. 1953லிருந்தே நடிகர் முத்துராமன் எனக்கு நல்ல நண்பர். ஒருகாலத்தில் திண்டிவனத்தில் நாடகம் நடத்தி பெயரும் புகழும் வாங்கியவர்கள், சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவுடன் நாடகக் கம்பெனியை மூடிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்கள். நான் அடிக்கடி எஸ்.எஸ்.ஆர் நாடகக்கம்பெனிக்கு செல்லும்போது முத்துராமனை அங்கு சந்திப்பேன். கே.பி.காமாட்சி அண்ணனின் உறவுக்காரன் என்பதால் அந்த நாடகக்கம்பெனியில் எனக்கு தனி மரியாதை கிடைக்கும். அங்கிருந்த அனைவருமே என்னிடம் நல்லா பழகுவார்கள். 

 

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் முத்துராமன் கதாநாயகனாக மிகச்சிறப்பாக நடித்திருப்பார். எனக்கும் முத்துராமனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததால் பைரவி படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று நினைத்து அவரிடம் கேட்கப்போனேன். என் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நீங்கள் நடிக்கவேண்டும் என்று நான் கூறியதும், அவர் கடுப்பாகிவிட்டார். நான் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறேன்... அடுத்தடுத்து படங்களும் புக் ஆகிட்டு இருக்கு... அங்க அங்க ஒரு சீன் ரெண்டு சீன் நடித்த யாரோ ஒருத்தருக்கு நான் வில்லனாக நடிக்கவேண்டுமா என்றுவிட்டார். கோபத்தில் அவருக்கு கண்ணெல்லாம் சிவந்துவிட்டது. நீங்கள் என்னுடைய நண்பர் என்ற உரிமையில் இப்படிவந்து கேட்டுவிட்டேன்... என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவந்துவிட்டேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.