Skip to main content

எமன் கதாபாத்திரத்தை கண்டு உயிரைவிட்ட பெண்... இனி நடிக்கவே மாட்டேன் என சத்தியம் செய்த நடிகர்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Sankaradas Swamigal

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

நல்ல தங்காள் கதையின் கிளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சிவரை கடந்த பகுதியில் கூறியிருந்தேன். வேட்டைக்கு சென்றிருந்த நல்ல தம்பி, திரும்பிவந்து பார்த்தபோது தங்கை நல்ல தங்காள் அவளுடைய ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருந்தாள். அவர்களுடைய பிணத்தை பார்த்து நல்ல தம்பி கதறி அழுவான். நல்ல தங்காளின் தற்கொலைக்கு நல்ல தம்பியின் மனைவிதான் காரணம் என ஊர் மக்கள் சொல்லியதையடுத்து, கோபத்தோடு அரண்மனைக்கு செல்கிறான். அங்கிருந்த தன்னுடைய மனைவியை அடித்து கொதிக்கிற சுண்ணாம்பு காளவாசலில் போட்டு கொலை செய்துவிடுகிறான். மேலும், அரண்மனையில் இருந்த மனைவியின் உறவினர்களை அடித்து நாட்டைவிட்டே துரத்திவிடுகிறான். பின், தங்கை நினைவில் இருந்து மீளமுடியாமல் பல மாதங்கள் சாப்பிடாமலேயே இருப்பான். 

 

தன்னுடைய நாட்டில் வறுமை என்பதால்தான் தன்னுடைய மனைவியை அவளுடைய அண்ணன் தேசத்திற்கு நல்லதங்காளின் கணவன் அனுப்பிவைத்தான். தற்போது தன்னுடைய நாட்டில் மழை பெய்து எல்லாம் செழித்தபிறகு தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்காக காசி ராஜன் வருகிறான். வந்தவனுக்கு தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு பேரதிர்ச்சி. அந்த துக்கம் தாங்காமல் காசி ராஜனும் தற்கொலை செய்ய முயற்சிப்பான். அப்போது வந்து அவனைத் தடுத்து நிறுத்திய இறைவன், நல்லதங்காளையும் ஏழு குழந்தைகளையும் சொர்க்கத்துக்கு அனுப்பிவைப்பதாக கதை முடியும். சங்கரதாஸ் சுவாமிகள் மட்டுமே ஆயிரம் முறை நல்லதங்காள் நாடகம் நடத்தியிருப்பார். அவரே வசனம், பாடல் எழுதி நடிக்கவும் செய்வார். சினிமா வருவதற்கு முன்பு சங்கரதாஸ் சுவாமியும் அவரது பாய்ஸ் நாடகக்கம்பெனியும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரப்பிரதாசம்.    

 

ad

 

ஒருமுறை சங்கரதாஸ் சுவாமிகள் எமன் வேஷத்தில் நடிக்கும்போது துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. பெரிய மீசை, பரட்டை தலையுடன் கையில் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு எமன் தோற்றத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் வருவார். எமன் வேடம் அவருக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். அவர் நடிக்கும்போது பார்த்துக்கொண்டிருக்கிற மக்களுக்கு குலை நடுங்குமாம்.அன்று மதுரையில் விடியவிடிய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தை முடித்துவிட்டு அருகே இருந்த வைகை ஆற்றுக்கு மேக்கப்பை கலைப்பதற்காக சங்கரதாஸ் சுவாமிகள் குளிக்கச் செல்கிறார். அப்போது ஆற்றில் குளித்துவிட்டு ஒரு பெண் எதிரே வருகிறாள். எமன் தோற்றத்தில் வந்த சங்கரதாஸ் சுவாமியை, உண்மையான எமன் என நம்பி அந்தப் பெண் மிரண்டுவிடுகிறார். அந்த அதிர்ச்சியில் அந்தப் பெண் அங்கேயே விழுந்து இறந்துவிடுகிறார். அந்த சம்பவம் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையில் இனிமேல் நான் நடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்துகொண்ட சங்கரதாஸ் சுவாமிகள், அதன் பிறகு கதை, வசனம், பாடல்கள் எழுதுவது மற்றும் நாடகம் நடத்துவதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.