Skip to main content

'ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த பெண் தெய்வமான கதை' - நல்லதங்காள் குறித்து பகிரும் கலைஞானம்!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நல்லதங்காள் கதை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

முந்தைய பகுதி...

 

வறட்சி காரணமாக ஏழு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய அண்ணன் தேசத்திற்கு நல்லதங்காள் கிளம்பி வந்தது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அண்ணன் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் உயிருக்கு இனி ஆபத்து வராது என நிம்மதி பெருமூச்சுவிட்டாள் நல்லதங்காள். பின், அண்ணன் அரண்மனை கதவைச் சென்று தட்டுகிறாள். அண்ணனின் மனைவி மூளி அலங்காரி வந்து கதவைத் திறக்கிறாள். என்ன என்று அவள் கேட்க, நல்லதங்காள் வறட்சி காரணமாக கணவனின் நாட்டை விட்டு கிளம்பிவந்தது குறித்து கூறுகிறாள். வறுமை நாட்டில் இருந்து வந்த நீ, வறுமையையும் அழைத்து வந்திருந்தால் என்ன செய்வது என்று கூறி நல்லதங்காளை உள்ளே வராதே என்கிறாள் மூளி அலங்காரி. உங்க அண்ணன் மிருக வேட்டைக்கு போயிருக்கிறார். அவர் வரும்வரை நீ வீட்டிற்குள் வரக்கூடாது. அவர் வந்து ஏதாவது கொடுத்தால் வாங்கிவிட்டு உங்கள் நாட்டிற்கே போய்விடு என மூளி அலங்காரி கூறுவதைக் கேட்டு நல்லதங்காளுக்கு அதிர்ச்சி. அண்ணன் வரும்வரை நாங்கள் எங்கு இருப்பது என நல்லதங்காள் கேட்க, அந்தக் கொட்டகையில் உன் குழந்தைகளுடன் படுத்துக்கொள் எனக் கூறிவிடுகிறார் மூளி அலங்காரி. 

 

அங்கிருந்த கொட்டகையில் தங்கிக்கொண்டு அங்கு கிடைத்த கீரை, காய்கறிகளை குழந்தைக்கு கொடுத்து ஒரு வாரத்தை கழிக்கிறாள். அன்று ஒருநாள், அரண்மனை வேலை ஆட்கள் தோட்டத்திலிருந்து பழங்களை பறித்துக்கொண்டு வந்து கூடைகூடையாக இறக்குகிறார்கள். அதில் ஒரு கூடை தவறி விழுந்து பழங்கள் கொட்டிவிடுகின்றன. பழங்கள் கொட்டியதும் ஏழு குழந்தைகளும் ஓடிச்சென்று ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். திமிர் பிடிச்ச நாய்களா... என் வீட்டுக்குள்ள நீங்க வரலாமா என்று கூறி குழந்தைகளை மூளி அலங்காரி அடித்துவிடுகிறாள். திட்டக்கூடாத வார்தைகளில் திட்டி அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள். 

 

ஏழு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நல்லதங்காள் நடக்க ஆரம்பிக்கிறாள். வழியில் இருந்த ஒரு கிணற்றில் தண்ணீர் குடித்துவிட்டு நீண்ட நேரம் யோசிக்கிறாள். ஏழு குழந்தைகளையும் அந்தக் கிணற்றிலேயே தூக்கி எறிந்துவிட்டு நாமும் அதில் விழுந்து செத்துவிடலாம் என முடிவெடுத்து, ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போட ஆரம்பிக்கிறாள். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பக்கத்தில் அந்தக் கிணறு இன்னும் உள்ளது. நல்ல தங்காள் கதை நாடகமாகவும் படமாகவும்கூட வந்துள்ளது. நாடகத்தில் ஒவ்வொரு குழந்தையை தூக்கி போடும்போதும் பாட்டு பாடுவார்கள். எவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் அந்தக் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துவிடும். ஏழு குழந்தைகளும் நல்லதங்காளும் அந்தக் கிணற்றிலேயே விழுந்து இறந்துவிடுகிறார்கள்.

 

வேட்டைக்கு சென்ற நல்ல தம்பி திரும்பிவரும்போதே, நல்லதங்காள் இங்கு வந்தது குறித்தும் அவளை  அரண்மனைக்குள் அனுமதிக்காமல் மூளி அலங்காரி விரட்டிவிட்டது குறித்தும் ஒருவர் சொல்லிவிடுகிறார். நல்ல தம்பிக்கு இதயமே நொறுங்கிவிட்டது. தங்கையும் குழந்தைகளும் எங்கு என்று ஆட்களுடன் தேட ஆரம்பிக்கிறான். ஒரு கிணற்றில் எட்டு பேரும் பிணமாக மிதப்பதை சிப்பாய் ஒருவன் கூறியதும் அலறியடித்துக்கொண்டு நல்லதம்பி ஓடுகிறான். தங்கச்சியின் சடலத்தை பார்த்து கதறி அழுகிறான். பின், அனைவரின் சடலத்தையும் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டுகிறான். இறைவன் அந்த ஏழு குழந்தைகளுக்கும் மோட்சம் கொடுத்ததாக நம்பிக்கையும் உண்டு. இன்றைக்கு நல்லதங்காளை கோவில் கட்டி வழிபடுகின்றனர். அந்தக் கோவிலில் ஏழு குழந்தை, நல்ல தங்காள் ஒரு கல்லில் படுத்திருப்பதுபோல இருக்கும். அதற்கு முன்பாக அம்மன் கோவில் ஒன்றும் இருக்கும். நல்ல தங்காளை குலதெய்வமாக வழிபடுபவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.