Skip to main content

'தமிழ்நாட்டின் வீதிகளில் 5000க்கும் மேற்பட்ட முறை போடப்பட்ட நாடகம்' - கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நல்லதங்காள் கதை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

நல்லதங்காள் கதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நல்ல தங்கை கதையும் நல்ல தங்காள் கதையும் ஒன்று எனப் பலர் நினைக்கிறார்கள். இரண்டும் வேறானது.  நல்ல தம்பி, நல்ல தங்காள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். தென்காசி பகுதியில் இருந்த ஒரு பகுதியை ஆண்டு வந்த நல்ல தம்பி, தங்கை மீது அளவு கடந்த பாசம் கொண்டவன். வேறொரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நல்லதங்காளைப் பெண் கேட்டு வருகிறார்கள். அண்ணனைப் பிரிந்து தொலைதூரத்திற்குச் செல்ல விருப்பமில்லாத நல்லதங்காள் முதலில் மறுக்கிறாள். பின், நல்ல தம்பி அடிக்கடி வந்து பார்ப்பதாகக் கூறி அவளைச் சம்மதிக்க வைக்கிறான். இருவருமே மன்னர் வம்சம் என்பதால் வெகுவிமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. நூறு மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு சென்றனர். 

 

திருமணம் முடிந்து நல்ல தங்காளை அழைத்துக்கொண்டு செல்ல மாப்பிள்ளை வீட்டார் தயாரானார்கள். அண்ணன் நல்ல தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு நான் போகமாட்டேன் என நல்லதங்காள் கதறி அழுகிறாள். அண்ணன் ஆறுதல் கூறி அவளை வண்டியில் ஏற்றுகிறான். ராஜாக்கள் பயன்படுத்துகிற ஒரு வண்டியில் அமர்ந்து அண்ணனிடம் இருந்து பிரியா விடைபெற்றுக் கிளம்புகிறாள் நல்லதங்காள். மணமுடித்துச் சென்ற நாட்டில் நல்லதங்காளுக்கு ராஜ வாழ்க்கை. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர். அப்படியே பதினைந்து ஆண்டுகள் கடந்தன. அந்த பதினைந்து ஆண்டுகளில் நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள். திடீரென அந்த நாட்டில் வறட்சி ஏற்படுகிறது. நல்லதங்காளுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்த நேரத்திலேயே நாட்டில் வறட்சி ஏற்பட ஆரம்பித்திருந்தது. அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்தபோது நாட்டில் உச்சக்கட்ட வறட்சி நிலவியது. குடிக்க நீரில்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானார்கள். ஆடு மாடுகள் வரிசையாக இறக்க ஆரம்பித்தன. 

 

பெரும்பாலான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டனர். மீதி இருக்கும் மக்கள் ராஜாவிடம் சென்று முறையிடுகின்றனர். இருக்கிற வேலைக்காரர்கள் அனைவரையும் அனுப்பி, ஆங்காங்கே இருந்தே தண்ணீர் கொண்டுவந்துதான் அரண்மனையிலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அதில் உங்களுக்கும் பாதி கொடுக்கட்டுமா என ராஜா கேட்கிறார். நீங்கள் நல்லா இருந்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும் எனக் கூறி மக்கள் மறுத்துவிடுகின்றனர். உங்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது எனக் கூறிய ராஜா, எவ்வளவு கஷ்டமானாலும் சரி... நம் பகுதிக்குத் தண்ணீர் கொண்டுவர விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளிக்கிறார். 

 

உடனே, தன்னுடைய மனைவியையும் ஏழு குழந்தைகளையும் அவளுடைய அண்ணன் தேசத்திற்குக் கிளம்பச் சொல்லிவிட்டு, தன்னுடைய தேசத்திற்குத் தண்ணீர் கொண்டுவருவதற்கான வேலைகளை ஆரம்பிக்கிறார். கிளம்பும்போது நீங்களும் எங்களுடன் வந்துவிடலாமே என மனைவி கேட்க, என்ன ஆனாலும் என் மக்களை விட்டு நான் வரவேமாட்டேன்... நீ கிளம்பு... நம் நாட்டில் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து நிலைமை சரியானதும் நான் வந்து உன்னை அழைக்கிறேன் என ராஜா கூறிவிடுகிறார். நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்தே தன் அண்ணன் தேசத்தை வந்தடைகிறார். அண்ணனின் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று உள்ளது. இனி நம் குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று வானத்தைப் பார்த்து நல்லதங்காள் கும்பிடுகிறாள். அடுத்து, அண்ணனின் தேசத்தில் நடந்தது என்ன என்பதை நோக்கிக் கதை நகரும்.      

 

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முறை இந்த நாடகம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும். அந்தக் காலத்தில் இந்த நாடகத்திற்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நாடகத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.