Skip to main content

ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீகாந்த்... திரையரங்கில் கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்! 

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். லட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பார். ஜெயகாந்தன் எழுதிய அற்புதமான காவியம் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். அதைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. மழையில் நனைந்து கொண்டிருந்த பெண்ணை, ஒரு வாலிபன் மழையில் நனையாதே என்று கூறி காரில் அழைத்துச் சென்று கற்பழித்துவிடுவான். பிறகு அந்த பெண்ணை அவள் வீட்டருகே இறக்கிவிட்டுச் சென்றுவிடுவான். அந்தப் பெண் தன் தாயிடம் நடந்ததைக் கூறுகிறாள். தலையில் இடி விழுந்ததுபோல அவள் தாய் உணர்கிறாள். பின், அவளுடைய அண்ணன் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறான். அவன் அழைத்துவரும் மாப்பிள்ளைகளை ஏதாவது காரணமா சொல்லி அவர் தட்டிக் கழித்துக்கொண்டே இருப்பாள். என்றைக்காவது ஒருநாள் நான் அவனைச் சந்தித்து விடமாட்டேனா என்று அவனையே மனதிற்குள் நினைத்துக் கொண்டு இருப்பாள். 12 வருடங்கள் கழித்து அவனைச் சந்திக்கையில் அவன் இரு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான். படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். 

 

வெண்ணிற ஆடை படம்தான் ஸ்ரீகாந்திற்கு முதல் படம். ஜெயலலிதாவிற்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். அந்தப் படம் வெளியானபோது இவரா ஹீரோ என்று திரையரங்கில் ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் கூச்சல் தாங்காமல் அந்த தியேட்டர் ஓனர் கையில் கம்பெடுத்துக்கொண்டு திரைக்கு முன்னால் வந்து நின்றுவிட்டார். படம் பிடிக்கலான எந்திருச்சு போய்டு... ஏதாவது சத்தம் போட்டு திரையில் என்னத்தையாவது எறிஞ்சிங்கனா கொன்னேபுடுவேன் என்றார். அவர், ஆள் பார்க்கவே பலமான ஆள் மாதிரி இருப்பார். அவர் வந்து அரட்டியதும் அத்தனை பேரும் அமைதியாகிவிட்டனர். உண்மையிலேயே அப்போது இருந்த ஸ்ரீகாந்தை யாரும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இப்படி இருந்த ஸ்ரீகாந்த், சில நேரங்கள் சில மனிதர்கள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.   

 

நான் அந்த நேரத்தில் ஸ்ரீகாந்தை வில்லனாக என் படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். அதற்காக அவர் வீட்டிற்கு நான் நேரில் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற அவர், சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்தீர்களா என்றார். நான் அவருடைய நடிப்பை வெகுவாக பாராட்டிப் பேசினேன். பின், என்ன விஷயமாக வந்திருக்கீங்க என்றார். நான் ரஜினியை ஹீரோவாக வைத்து படமெடுக்கிறேன். அந்தப் படத்தில் நீங்கள் வில்லனாக நடித்தால் வியாபார ரீதியாக எனக்கு உதவிகரமாக இருக்கும் என்றேன். அதுக்கென்ன கலைஞானம்... தொழில்தான... எந்த வேஷம் கொடுத்தாலும் நடிக்கிறேன்... நீ கதைகூட சொல்ல வேண்டாம்... தேதி மட்டும் கொடு என்றார். சம்பளம்கூட உன்னால என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு எனக் கூறிவிட்டார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் ஸ்ரீகாந்த். அப்படிப்பட்ட ஸ்ரீகாந்த்தின் வாழ்க்கையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டது. அதுபற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.