Skip to main content

"அவருக்கு ஏதாவது கடன் இருக்கா?" சுடுகாட்டில் எம்.ஜி.ஆர் கேட்ட கேள்வி!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கவிஞர் காமாட்சியின் இறுதிச்சடங்கை எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்தியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கவிஞர் காமாட்சி அண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். ஒருநாள் என்னை அழைத்த காமாட்சி அண்ணன், வீட்டில் இருந்த தம்பூராவை என்னிடம் கொடுத்து, “இதை விற்று காசாக்கிவிட்டு வா... எனக்கு குடிக்க காசு இல்ல... வீட்டுல பாப்பாக்கும் சோறு இல்ல” என்றார். சரி என்று அதை வாங்கிவிட்டு தெருவில் நடக்க ஆரம்பித்தேன். மார்வாடி கடையிலும் வாங்க மாட்டார்கள். இதை யாரிடம் சென்று விற்கலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். அந்தக் காலத்தில் பிராமணர்கள்தான் அதிகம் பாடல் பாடுவார்கள். அவர்களுக்குத்தான் இது பயன்படும் என்பதால், மயிலாப்பூர் சென்று ஒவ்வொருவரிடமாக கேட்டேன். அந்த வீட்டில் சென்று கேளு... இந்த வீட்டில் சென்று கேளு... என ஆளுக்கு ஒரு வீட்டைக் காட்டினார்கள். ஒரு வீட்டில் வாங்கிக்கொள்கிறேன் எனக் கூறினார்கள். ஆனால், மாலை சங்கீதம் கற்றுக்கொடுக்க வரும் வாத்தியார் வந்து இது உபயோகமாக இருக்கும்; வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினால் மட்டுமே வாங்கிக்கொள்வேன் என்றார். அவர் மாலை வரச் சொன்னதால் தம்பூராவை தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மயிலாப்பூரில் இருந்து தி.நகர்வரை நடக்கமுடியாமல் நடந்துவந்தேன். 

 

தம்பூராவோடு நான் திரும்பிவருவதைக் கண்டதும் காமாட்சி அண்ணன் நடந்ததை விசாரித்தார். மாலை வாத்தியார் வந்து சொன்னால் ஒரு வீட்டில் வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார்கள் என்று அவரிடம் கூறினேன். “மாலைவரை அங்கேயே இருக்க வேண்டியதுதானே... ஏன் திரும்பி வந்தாய்” என்று என்னை திட்டினார். “ரொம்ப பசியெடுத்தது... அதான் வந்துவிட்டேன்” என நான் கூற, “பசியெடுத்தா இங்க என்ன சாப்பிட இருக்கு” என கோபத்துடன் கத்தினார். நான் தம்பூராவை தூக்கிக்கொண்டு மீண்டும் மயிலாப்பூர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் மெல்ல மெல்ல நடந்து சென்றதில் மாலை ஆகிவிட்டது. பாட்டு சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரும் அந்த நேரத்திற்கு வந்துவிட்டார். தம்பூராவைப் பார்த்த வாத்தியார் இது பச்சை தம்பூரா... நாதம் கட்டாது எனக் கூறிவிட்டார். நன்கு காய்ந்த பிறகுதான் தம்பூரா கட்ட வேண்டும். ஆனால், பச்சையாக இருக்கும்போது இந்த தம்பூராவை செய்துள்ளதால், இது சரியாக நாதம் கட்டாதாம். அவர்கள் வேண்டாம் எனக் கூறிவிட்டதால் வேறு வழியில்லாமல் அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

 

காமாட்சி அண்ணனிடம் விஷயத்தைக் கூற, கடுப்பான அவர், இந்த சனியன் வீட்டுலயே இருக்கக்கூடாது என அங்கிருந்த கல்லில் ஓங்கி அடித்தார். தம்பூரா துண்டுத் துண்டாக சிதறியது. அன்று இரவு அந்தக் கோபத்துடனேயே படுக்கச் சென்றார். மறுநாள் காலை உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவரால் நடக்க முடியவில்லை. தோளில் சாயவைத்துக்கொண்டு மெல்லமாக நடத்திக்கொண்டு சென்றோம். மருத்துவமனைக்குள் சென்றதும் “எனக்கு மூத்திரம் வருது” என்றார். ஓர் ஓரத்திற்கு அழைத்துச் சென்று, அவரை சிறுநீர் கழிக்க உட்கார வைத்துவிட்டு, தன்னுடைய புடவையால் சுற்றி நின்று அவரது மனைவி மறைத்துக்கொண்டார். சிறுநீரோடு சேர்ந்து அவர் உயிரும் போய்விட்டது. உடன் வந்தவர்கள் கதறி அழ ஆரம்பித்துவிட்டனர். மருத்துவம் படித்துவிட்டு அங்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த இளம் வயதுடைய மருத்துவர் ஒருவர் வந்து, என்ன என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறினோம். இறந்துவிட்டார் என்று தெரிந்தால் உடலை அறுத்துவிட்டுத்தான் கொடுப்பார்கள். 10 நாட்கள் ஆகிவிடும். நீங்கள் சத்தமே இல்லாமல் ஏதாவது வண்டி ஏற்பாடு செய்து உடலைக் கொண்டு சென்றுவிடுங்கள் என்றார். யாராவது கேட்டால் வண்டி வரும்வரை மயக்கமாக இருக்கிறார் என்றே கூறுங்கள் என்றார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரை மடியில் படுக்க வைத்து பிணத்திற்கு காற்று வீசிக்கொண்டு இருந்தோம். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். 

 

முதல் மனைவியுடனான திருமணத்திற்கு வாங்கிய பட்டு வேஷ்டி வீட்டில் இருக்கும். அதை அடமானம் வைத்து பணம் வாங்கிவிட்டு வா என என்னை அனுப்பிவைத்தார்கள். அவசர அவசரமாக எலக்ட்ரிக் ட்ரைனில் ஏறி வீட்டிற்குச் சென்று, அந்த வேஷ்டியை விற்று காசாக்கினேன். அந்தக் காசில்தான் ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து காமாட்சி அண்ணனின் உடலை வீட்டிற்கு கொண்டுவந்தோம். எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், வி.கே. ராமசாமி, கே.ஆர். ராமசாமி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ஒரு கட்டத்தில் யாரும் பிணத்தைத் தூக்க வராததால் எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், வி.கே. ராமசாமி, கே.ஆர். ராமசாமி என நால்வரும் சேர்ந்து பிணத்தைத் தூக்கினர். அரை கிலோமீட்டர் தூரம்வரை சுமந்து அவரது சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டுவந்தனர். உடல் தகனத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எம்.ஜி.ஆர். செய்திருந்தார்.

 

முதல் மனைவியின் மகள்தான் அவருக்குக் கொள்ளி வைத்தார். எம்.ஜி.ஆர். தன்னுடைய வாழ்க்கையில் சுமந்த ஒரே பிணம் காமாட்சி அண்ணனின் சடலத்தைத்தான். எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையேயான முதல் சந்திப்பும் சுடுகாட்டில் நடந்த இந்த சந்திப்புதான். “நீங்களும் அந்த வீட்டில்தான் இருக்கீங்களா” என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்றவுடன், “அவருக்கு ஏதாவது கடன் இருக்கிறதா” என்றார். “ஆயிரம் ரூபாய்வரை இருக்கிறது” என்றேன். “நாளைக்கு ஆஃபிஸில் வந்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள். முதலில் அந்தக் கடனை அடைத்துவிடுங்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஆஃபிஸில் எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணி இருந்தார். அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வாங்கிவந்து எல்லா கடனையும் அடைத்தேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.