Skip to main content

பாகவதர் படத்தைப் பார்த்துவிட்டு புதுமணத்தம்பதி எடுத்த விபரீத முயற்சி! கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தன்னுடைய இளமைக்காலத்தில் 'அம்பிகாபதி' திரைப்படம் பார்க்கச் சென்ற நினைவுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

ஆண்டிபட்டியிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த கன்னியப்பபிள்ளைபட்டிதான் என்னுடைய தாத்தாவின் சொந்த ஊர். என் அம்மா சிறு வயதிலேயே என்னை அந்த ஊரில் கொண்டுவிட்டுவிட்டார். என்னுடைய தாத்தா வீட்டில்தான் நான் வளர்ந்தேன். கன்னியப்பபிள்ளைபட்டி சுற்றுவட்டாரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றதுபோல விவசாயம் நடக்கும். ஒரு சீசனில் கடலை, ஒரு சீசனில் மிளகாய் பழம் என மாறிமாறி என் தாத்தா விவசாயம் செய்வார். எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஏக்கர் அளவிலான தோட்டத்தில் மிளகாய் பழம் போட்டிருந்தார். அந்த மிளகாய் தோட்டத்தைக் காவல் காப்பது என்னுடைய வேலை. வீட்டிலிருந்து அந்தத் தோட்டத்திற்குத் தினமும் நடந்துதான் செல்வேன். என் வயதை ஒத்த வயதில் மாமா ஒருவர் எனக்கு இருந்தார். நாங்கள் இருவரும்தான் தினமும் தோட்டத்தைக் காவல் காப்போம். காலை, மாலை, இரவு என நாள் முழுவதும் அங்குதான் இருக்கவேண்டும். அந்த வழியாக வருகிறவர்கள் ஒரு கையை வைத்து இழுத்தார்கள் என்றால் ஒரு பை நிறைய மிளகாய் பழத்தை அள்ளிக்கொண்டு சென்றுவிடலாம். அதனால், மிகவும் கவனமாக காவல் காக்க வேண்டும். பின், அறுவடை கட்டத்தை நெருங்கியவுடன் பழத்தைப் பறித்து, காயப்போட்டு எடுத்து, அதை விற்பனை செய்யும் வேலையை என் தாத்தா பார்த்துக்கொள்வார். 

 

அந்தக்காலத்தில் விவசாய நிலத்தில்தான் ஆட்கள் அதிகமிருப்பதால் அங்கு நேரடியாக வந்து தின்பண்டங்களை விற்பார்கள். பணத்திற்குப் பதிலாக பண்டமாற்று முறையில் கொடுப்பதை வாங்கிக்கொள்வார்கள். நாடார் ஒருவர் கடலைமிட்டாய் விற்றுக்கொண்டு வருவார். நாங்கள் அவரை 'நாடார் அண்ணே... நாடார் அண்ணே' என்றுதான் கூப்பிடுவோம். அவருக்கு மிளகாய் பழம் கொடுத்துவிட்டுக் கடலைமிட்டாய் வாங்கிக்கொள்வோம். ஒரு மிட்டாய் வாங்கி நானும் என் மாமாவும் சரிபாதியாகப் பிரித்துக்கொள்வோம். ஆண்டிபட்டியில் டூரிங் டாக்கிஸில் தினமும் படம் போடுவார்கள். நானும் அவரும் ஆளுக்கு ஒரு நாள் சென்று படம் பார்ப்போம். முதலில் அவர் சென்று பார்ப்பார். படம் நன்றாக இருந்தது என்றால் மறுநாள் நான் சென்று படம் பார்ப்பேன். படம் நன்றாக இல்லையென்றால் நான் போகமாட்டேன். மிளகாய் பழத்தை நாடாரிடம் விற்று அதிலிருந்து கிடைக்கும் காசை வைத்துத்தான் சினிமாவிற்குப் போவோம். சினிமாவிற்கு போகும் நாட்கள் மட்டும் கடலை மிட்டாய் வாங்குவதற்குப் பதில் அவரிடம் காசு வாங்கிக்கொள்வோம். இந்த விஷயமெல்லாம் என் தாத்தாவிற்குத் தெரியாது. அந்தப்பகுதியில் தண்ணியே கிடையாது. கிணற்றில் மிக ஆழத்தில் கிடக்கிற தண்ணியை இறைத்துதான் நீர் பாய்ச்சுவார்கள். அப்படி கஷ்டமான உழைப்பில்தான் அந்த மிளகாய் பழம் விளைகிறது. அதைத் திருட்டுத்தனமாக விற்று சினிமாவிற்கு சென்றால் சும்மாவிடுவாரா? விஷயம் தெரிந்தால் எங்கள் இருவரையும் அடி வெளுத்துவிடுவார். 

 

எங்கள் தோட்டத்திலிருந்து சற்று தொலைவில் நீரார்பட்டி என்று ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஊருக்கு வெளியே குடிசை போட்டு ஆடு, மாடு வைத்து பால் கறந்து விற்பனை செய்வார். அவர் ஊருக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருந்தன. இது மாதிரியான நிறைய சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன. அந்தக்காலத்தில் எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது. 'வாங்க சாமி' என்று என்னை அவர் கூப்பிடுவார். நான் 'வாங்க அண்ணே...' என்று சொல்லுவேன். அன்று ஒருநாள், எங்கள் தோட்டத்திற்கு வந்த அவர், முந்தைய நாள் அவர் பார்த்த, தியாகராஜ பாகவதர், சந்தானலட்சுமி நடிப்பில் 1937இல் வெளியான 'அம்பிகாபதி' திரைப்படத்தைப் பற்றி எங்களிடம் கூறினார். அம்பிகாபதி திருட்டுத்தனமாகச் சென்று அமராவதியைச் சந்திப்பார். இருவரும் சந்திக்கையில், அமராவதியைக் கையில் தூக்கிக்கொண்டுபோய் கட்டிலில் போடுவார். இருவருக்கும் க்ளோசப் ஷாட் இருக்கும். அப்படியே பாடல் ஆரம்பிக்கும். அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு 'அடடா இப்படியெல்லாம் லவ் பண்ணலாமா' என்று ஜனங்கள் பேசிக்கொண்டனர். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் சென்ற ஒரு புதுமணத்தம்பதி இதுபோல முயற்சி செய்து பார்த்துள்ளது. அந்த ஆண் தன்னுடைய மனைவியை இதுபோல கட்டிலில் தூக்கிப்போட, கட்டில் உடைந்து மனைவிக்கு முதுகெலும்பு உடைந்துவிட்டது. அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் ஓவென்று அலற, பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் கூடிவிட்டனர். பின், அந்தப்பெண்ணைத் தூரத்திலிருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். கிராமத்தில் ஒரு விஷயம் நடந்தது என்றால் காட்டுத்தீ போல பரவிவிடும். 'பாகவதர் மாதிரி பண்றேன்னு சொல்லி பொண்டாட்டி குருக்கெலும்ப உடைச்சுட்டான்' என்று ஊருக்குள் அனைவரும் கேலி பேச ஆரம்பித்துவிட்டனர். படக் கதையோடு சேர்த்து இந்தக் கதையையும் அவர் எங்களிடம் கூறினார். 

 

அதைக் கேட்டதிலிருந்தே இந்தப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாகிவிட்டது. மறுநாள், கடலை மிட்டாய் கொண்டுவந்த நாடாரிடம் மிளகாய் பழத்தைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரிடம் காசு வாங்கிக்கொண்டோம். அந்தப் படத்தை முதலில் நான் சென்று பார்க்க என் மாமாவும் சம்மதித்துவிட்டார். என் மாமாவைக் காவலுக்கு விட்டுவிட்டு, நான் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்துக்கொண்டு சினிமா கொட்டகைக்குள் சென்று அமர்ந்தேன். படம் தொடங்கிவிட்டது. அந்த கட்டில் சீன் எப்ப வரும் என்று ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்தது. அந்த சீனை பார்த்துவிட்ட சந்தோசத்தோடு தோட்டத்திற்குத் திரும்பினேன். கையில் பெரிய குச்சியுடன் என் தாத்தா அங்கு நின்றுகொண்டிருந்தார். "உனக்கு கஞ்சி ஊத்துறதே பெரிய விஷயம்... நீ சினிமாவுக்குப் போயிட்டு வர்ரீயா" எனக் கூறிக்கொண்டே ஒரு அடி அடித்தார். நான் ஓட ஆரம்பித்துவிட்டேன்... பின்னால் என்னைத் துரத்திக்கொண்டு வந்த அவரால் எனக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. "நீ எங்க போயிருவ... என் ரெண்டு மகனும் வரட்டும்... அவனுகட்ட சொல்லி உன் முதுகுத்தோல உரிக்கச் சொல்றேன்" எனத் திட்டிக்கொண்டே என்னை விரட்டி வந்தார். அந்த சம்பவத்தை இன்றும் என்னால் மறக்கமுடியாது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.