Skip to main content

காரில் கிடந்த மல்லிகைப்பூ... கடுப்பில் சேரைத் தூக்கி அடித்த தேவர்... கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள் #5

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்பத்தேவர் மற்றும் எம்.ஜி.ஆர் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

முந்தைய பகுதிக்கு இங்கே ஃக்ளிக் செய்யவும் 

 

சாண்டோ சின்னப்பத்தேவர் காலையில் கார் கதவைத் திறக்கிறார். ஒரு முழ நீளமுடைய மல்லிகைப்பூ உள்ளே கிடக்கிறது. உடனே டிரைவரை அழைத்து விசாரிக்கிறார். முதலில் தயங்கிய டிரைவர், பின் வந்தது யார் என்பதைக் கூறுகிறார். நேற்று இரவு வந்தவர், இரவு முழுவதும் நம்ம ஆஃபிஸில்தான் இருந்தார்... எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்... காலையில் தான் போய் இறக்கிவிட்டு வந்தோம் என்கிறார். தேவருக்கு பயங்கர கோபம். "காலையில் யார் வந்தாலும் பரவாயில்லை... நைட் எதுக்கு ஆட்களைக் கூப்பிட்டு வந்து ஆஃபிஸ்ல இருக்க வைக்குறீங்க. இந்தக் காரும் ப்ரொடக்ஷன் கார். நான் இந்தக் காருல போவேன்னு இந்த ஏரியால இருக்க எல்லாருக்கும் தெரியும். நீ நைட்டு யாரையாவது கூட்டிட்டு வந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க" என்று கண்டிக்கிறார். 

 

ad

 

நேரே ப்ரொடக்ஷன் ஆஃபிஸுக்கு போன தேவர், எஸ்.ஏ.நாராயணனை அழைத்து நைட்டுலாம் எதுக்கு ஆட்களைக் கூட்டிட்டு வந்து ஆஃபிஸில் இருக்க வைக்குறீங்க எனக் கேட்கிறார். "தேவரே உமக்கு இதெல்லாம் தேவையில்லை" என எஸ்.ஏ.நாராயணன் கூறிவிட, தேவருக்குக் கடும் கோபம். "நான் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து படம் எடுத்துக்கிட்டு இருக்கேன்... என் வேலை இல்லையா" எனக் கேட்கிறார் தேவர். "ஆமாயா... படத்தை எடுத்துக் கொடுக்கிறோம். கடைசியில் கணக்கு பார்த்து லாபத்தை வாங்கிட்டு போய்கிட்டு இருங்க" என அவர் சொல்ல, உச்சகட்ட கோபத்திற்குச் சென்ற தேவர் சேரைத் தூக்கி அடித்துவிடுகிறார்.

 

அப்போது, 'நல்ல தங்கை' படம் பாதிதான் முடிந்திருந்தது. ஏ.பி.நாராயணன் வந்து பிரச்சனையை சமாளித்து வைத்து, தேவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்து, அந்தப் படத்தில் இருந்து தேவரை வெளியேறச் சொல்கிறார். தேவரும் தனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிவிட்டு, நல்ல தங்கை படத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். இது நடந்தது எல்லாம் கோயம்புத்தூர்ல. அதன் பிறகுதான், தேவர் சென்னைக்கு வருகிறார்.

 

நான் சென்னை வந்து படம் எடுக்கப் போறேன் என எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டு சென்னை கிளம்பத் தயாராகிறார் தேவர். "அண்ணே நீங்க படம் எடுத்தா நான் அதுல நடிக்கணும்னு கோயம்புத்தூர் பார்க்ல உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னேனே... மறந்துட்டிங்களா... நீங்க வேலையை ஆரம்பிங்க... மற்றதை நான் பார்த்துக்கிறேன்" என்றார் எம்.ஜி.ஆர். ரெண்டு பேரும் சேர்ந்த முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு. எம்.ஜி.ஆர். இல்லனா தேவர் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்க முடியாது. அந்தப் படத்தோட கிளைமேக்ஸ் எடுக்குற சமயத்துல இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்திருச்சு. அப்போது பிரிஞ்சவங்க பின்னாடி ஒன்னு சேர்ந்துட்டாங்க. எம்.ஜி.ஆர் பிரிந்த பிறகு தேவர் எடுத்த நான்கு படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. அதிலிருந்து தேவர் எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.